தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கை, திமுக அரசின் மோசமான நிதி மேலாண்மைக்குச் சான்றாக உள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
1952 முதல் 2021 வரையிலான 70 ஆண்டுகளில் தமிழகத்தின் நேரடி கடன் ரூ.4.56 லட்சம் கோடி மட்டுமே. ஆனால், கடந்த ஐந்தாண்டு திமுக ஆட்சியில் மட்டும் வாங்கப்பட்ட கடன் ரூ.4.96 லட்சம் கோடி. இது முந்தைய 70 ஆண்டு கால கடனை விட 109% அதிகம். இதன் மூலம் தமிழகத்தில் ஒவ்வொருவர் தலையிலும் ரூ.1.27 லட்சம் கடன் சுமையை திமுக அரசு சுமத்தியுள்ளது.
நடப்பாண்டில் (2025-26) மட்டும் இலக்கை விட 21% அதிகமாக ரூ.1,84,551 கோடியைக் கடனாக மு.க.ஸ்டாலின் அரசு வாங்கியுள்ளது. இதில் பழைய கடனை அடைக்கச் செலுத்தியது போக, மீதமிருக்க வேண்டிய ரூ.77,223 கோடி எங்கு போனது என்றே தெரியவில்லை என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: டெட் பாஸ் பண்ணவங்க கதி என்ன? ஆசிரியர் தேர்வு அட்டவணை எங்கே? திமுக அரசை வெளுத்து வாங்கும் அன்புமணி!

மூலதனச் செலவு: ரூ.51,443 கோடி மட்டுமே மூலதன செலவு செய்யப்பட்டுள்ளது; ஆனால் அதைவிட மூன்றரை மடங்கு அதிகமாகக் கடன் வாங்கப்பட்டுள்ளது. வருவாய்ப் பற்றாக்குறை: பற்றாக்குறையை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, அதை இலக்கை விட 66% உயர்த்தி, ரூ.69,219 கோடியாக அதிகரித்துள்ளது. அரசின் வரி வருவாய் இலக்கை விட ரூ.14,355 கோடி குறைந்துள்ள அதே வேளையில், செலவுகள் ரூ.5,113 கோடி அதிகரித்துள்ளன.
திமுக அரசு தொடர்ந்தால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் வங்கிகளிடம் அடகு வைக்கப்பட்டு விடும் என்றும், தமிழ்நாடு திவாலாவதைத் தடுக்க திமுக அரசு உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் இதனைச் செய்து முடிப்பார்கள் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ராஜ கண்ணப்பன் ஒரு பச்சோந்தி.. வைகோவிற்கு ஞாபக மறதி...! செல்லூர் ராஜு அதிரடி பேட்டி!