சென்னை: தமிழக அரசு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா 3,000 ரூபாய் ரொக்கம் வழங்கியது பெரும் வரவேற்பை பெற்றாலும், இப்போது அதன் விளைவாக 500 ரூபாய் நோட்டு புழக்கம் அதிகரித்து சந்தையில் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வணிகர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் திணறி வருகின்றனர்.
தமிழகத்தில் 2.15 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 3,000 ரூபாய் என மொத்தம் 6,453 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இந்த தொகை ஒருவருக்கு 500 ரூபாய் நோட்டு வீதம் 6 நோட்டுகளாக கொடுக்கப்பட்டது. இதனால் சாதாரண மக்கள் கையில் திடீரென பெரும் அளவு 500 ரூபாய் நோட்டுகள் வந்துள்ளன.
பொங்கல் பரிசு பணத்தால் பலரும் தங்கள் ஊர்களில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் ஒரே சமயத்தில் பெரும்பாலானோர் 500 ரூபாய் நோட்டுகளை கொடுப்பதால், கடைக்காரர்களுக்கு சில்லரை தர முடியாமல் திணறல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.3,000மா? ரூ.5,000மா? பொங்கல் பரிசு ரொக்கம் எவ்வளவு? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

வணிகர்கள் கூறியதாவது: "தினமும் ஒரு மளிகை கடையில் சராசரியாக 5,000 முதல் 10,000 ரூபாய் வரை வியாபாரம் நடக்கும். 100 பேர் வந்தால் 20 பேர் மட்டுமே சிறு நோட்டுகளை கொடுப்பார்கள். மற்றவர்கள் 500 ரூபாய் நோட்டு தருவார்கள். ஆனால் இப்போது 90-95 சதவீதம் பேர் 500 ரூபாய் நோட்டுகளை மட்டுமே கொடுக்கிறார்கள். சிலருக்கு மட்டுமே சில்லரை தர முடிகிறது. மற்றவர்களுக்கு தர முடியாமல் போய்விடுகிறது."
"ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுபவர்களும் பயணிகள் கொடுக்கும் 500 ரூபாய் நோட்டை எடுத்துக்கொண்டு கடைக்கு வந்து சில்லரை கேட்கிறார்கள். ஆனால் எங்களிடம் சில்லரை இல்லை. இதனால் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது."
பொங்கல் பரிசு 3,000 ரூபாய் வழங்கியதால் 500 ரூபாய் நோட்டு புழக்கம் திடீரென அதிகரித்துள்ளது. இதனால் சிறு கடைகள், சாலையோர வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்த சில்லரை தட்டுப்பாடு எப்போது சரியாகும்? வங்கிகள் அல்லது அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா? என்பது தற்போது மக்களிடையே எழுந்துள்ள கேள்வியாக உள்ளது.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு தொகுப்பில் குறையா?! தரமில்லாத பொருட்கள் விநியோகமா?! அரசு அதிரடி உத்தரவு!