×
 

திமுக தேர்தல் அறிக்கை ஒரு மணிமகுடம்! - வில்லிவாக்கத்தில் திமுக வேட்பாளருக்காக பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பிரசாரம்!

சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டார்.

சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று அயனாவரம் பகுதியில் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். திமுக - தேமுதிக கூட்டணி பலத்தை நிரூபிக்கும் வகையில் அமைந்த இந்தப் பிரசாரத்தில், அவர் தனது கணவர் கேப்டன் விஜயகாந்தின் பாணியில் பேசித் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட திமுக தேர்தல் அறிக்கையைப் வெகுவாகப் பாராட்டிய பிரேமலதா, அதில் முத்து முத்தாகப் பல அறிவிப்புகள் உள்ளன. குறிப்பாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு 8,000 ரூபாய் மதிப்பிலான கொள்முதல் கூப்பன்கள் வழங்கும் திட்டம் அந்த அறிக்கையின் மணிமகுடம் போன்றது எனப் புகழ்ந்து தள்ளினார். மகளிர் உரிமைத் தொகை மற்றும் காலை உணவுத் திட்டம் போன்ற அற்புதத் திட்டங்களைச் செயல்படுத்திய திமுக-விற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

வருங்காலம் இளைஞர்களுடையது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அவரது நண்பர் கார்த்திக் மோகன் மற்றும் எனது மகன் விஜய பிரபாகரன் போன்ற இளைஞர்கள் அரசியலுக்கு வருவது அவசியம். இப்போது அண்ணா நகர் கார்த்தி என்று அழைக்கப்படுபவர், தேர்தலுக்குப் பிறகு 'வில்லிவாக்கம் கார்த்தி' என்று அடையாளப்படுத்தப்படுவார். அவர் இந்தத் தொகுதிக்காக அயராது உழைப்பார் என உறுதி அளித்தார்.

இதையும் படிங்க: அடிமை அதிமுக-வின் முதுகில் ஏறி வரும் பாஜக-வைத் தடுப்போம்! நெல்லையில் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின்பிரச்சாரம்!

தனது கணவர் கேப்டன் விஜயகாந்த் மற்றும் தான் அண்ணனாகக் கருதும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகிய இருவருமே கண்ணியமான அரசியலை முன்னெடுக்கக் கூடியவர்கள் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். ஆயிரம் கைகள் கொண்டு மறைத்தாலும் ஆதவனை (உதயசூரியனை) மறைக்க முடியாது" என அவர் முழங்கினார். தாம் கேப்டனின் மனைவி என்பதை நினைவுறுத்திய பிரேமலதா, விஜயகாந்தின் புகழ்பெற்ற 'தவசி' பட வசனத்தைப் பேசி கூட்டத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தினார்: துளசி கூட வாசம் மாறும், ஆனால் இந்தத் தவசி வார்த்தை மாறியதாக வரலாறு கிடையாது. சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்.

இறுதியாக, கார்த்திக் மோகனைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வில்லிவாக்கம் தொகுதி மக்களிடம் அவர் அன்புடன் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் குடும்பமே வந்தாலும் வெற்றி எங்களுக்கே! வில்லிவாக்கத்தில் அதிரடி கிளப்பும் ஆதவ் அர்ஜுனா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share