திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் போலீஸ் கமிஷனர் மற்றும் துணை கமிஷனர் ஆஜராகாததால் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை மாவட்டம் எழுமலை ராமரவிக்குமார் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், 2025 டிசம்பர் 1-ஆம் தேதி 'திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார். இதை நிறைவேற்றாததால் தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில், டிசம்பர் 4-ஆம் தேதி 'ராமரவிக்குமார் தரப்பில் தீபம் ஏற்ற போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன் ஆகியோர் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தனர். அதேநேரம், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த இரு நீதிபதிகள் அமர்வு, அவமதிப்பு வழக்கை முழுமையாக தடை செய்யவில்லை என்று தெளிவுபடுத்தியது.
இதையும் படிங்க: ED ரேடாரில் சிக்கும் அடுத்த அமைச்சர்?! அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சிக்கல்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

இந்நிலையில், அவமதிப்பு வழக்கு மீண்டும் நீதிபதி சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. "தீபத்தூண் அமைந்த மலை உச்சியில் நீதிமன்றம் நியமிக்கும் 5 நபர்களை வழிபட அனுமதிக்க வேண்டும். இதில் உரிய முடிவெடுத்து தெரிவிக்காவிட்டால் போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்" என்று ஏற்கனவே எச்சரித்திருந்த நீதிபதி, "இருவரும் ஏன் ஆஜராகவில்லை? ஆஜராகாவிட்டால் வாரன்ட் பிறப்பிக்க நேரிடும்" என்று கடுமையாக எச்சரித்தார்.
அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அதன்பிறகு நீதிபதி, "ஒட்டுமொத்த அவமதிப்பு வழக்கிலும் இரு நீதிபதிகள் அமர்வு தடை விதிக்கவில்லை. எனவே வழக்கு ஏப்ரல் 9-க்கு ஒத்திவைக்கப்படுகிறது" என்று உத்தரவிட்டார்.
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் விவகாரம் தொடர்பான இந்த உத்தரவு, பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் போலீஸ் அதிகாரிகள் ஆஜராகாதது, மேலும் விசாரணைக்கு வழிவகுத்துள்ளது. ஏப்ரல் 9-ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது உரிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரே நாளில் நல்ல செய்தி! ஒரு கெட்ட செய்தி!! எம்.பி தம்பிதுரைக்கு சிக்கல்!! ஆப்பு வைத்த கோர்ட்!!