மதுரையின் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை மீண்டும் நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் எம். ஜோதிராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் ஆஜராகி முக்கிய தகவல்களை முன்வைத்தார். அவர் வாதிடுகையில், திருப்பரங்குன்றத்தில் கடந்த பல தசாப்தங்களாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைகளை மாற்றி புதிய வழக்கத்தை திடீரென அமல்படுத்த முடியாது என்றார். மேலும், தீபம் ஏற்றும் விவகாரத்தில் உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய உத்தரவுக்கு எதிராக ஏற்கனவே ராம ரவிக்குமார் தரப்பும் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளதாகவும், தற்போது தமிழக அரசும் அதே விவகாரத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் ஏன் தயக்கம் காட்டப்படுகிறது என்று கேள்வி எழுப்பினர். மேலும், இரு தரப்பினரும் சமரச தீர்வை நோக்கி நகராமல் வழக்கை நீண்டகாலம் நிலுவையில் வைத்திருக்க விரும்புகிறார்களா என்றும் கேட்டனர்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்!! மலை அளவிடும் பணி துவக்கம்! ஆக்ஷனில் இறங்கியது தொல்லியல்துறை!

விசாரணையின் போது தர்கா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மோகன், ஏற்கனவே சமரச பேச்சுவார்த்தைக்கு தாங்கள் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்ததாக கூறினார். ஆனால் அந்த முயற்சியை எதிர் தரப்பு ஏற்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மறுபுறம், ராம ரவிக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன், முதலில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றி தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்றும், நீதிமன்றம் முன்னெடுக்கும் சமரச முயற்சிகளுக்கு தாங்கள் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை மறு உத்தரவு வரும் வரை நீட்டித்து உத்தரவிட்டனர். மேலும், இந்த முக்கிய வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூலை 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதனால் திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் மீண்டும் அரசியல் மற்றும் மத ரீதியான கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: இதென்னடா வம்பா போச்சு! அமைச்சர்களின் எண்களை வெளிப்படையாக அறிவித்ததால் சிக்கல்!