தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்த விவகாரத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகளைத் தமிழக அரசு முழுமையாக ஏற்கிறதா இல்லையா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மிகக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரணியின் போது, காவல்துறையினர் விதிமுறைகளைப் பின்பற்றாமல் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இச்சம்பவத்திற்குக் காரணமான அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் ஒருநபர் ஆணையப் பரிந்துரைகளை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் எனக் கோரி மதுரையைச் சேர்ந்த கதிரேசன் உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கண்ணன் மற்றும் ஹென்றி டிபேன், துப்பாக்கிச்சூடு நடந்து 8 ஆண்டுகள் கடந்தும் இதுவரை எந்தவொரு காவல்துறை அதிகாரி மீதும் உருப்படியான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மிகக் காட்டமாக வாதிட்டனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியை உலுக்கிய சம்பவம்... லாக்கப் டெத்..? அருணாச்சலத்தின் உடற்கூறாய்வு நிறைவு..!
இதற்குப் பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், ஆணைய அறிக்கையின் பரிந்துரைகள் பகுதியளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும், துறை ரீதியான நடவடிக்கைகள் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ரூ.30 லட்சம் இழப்பீடு மட்டுமே வழங்கப்பட்டதா? அருணா ஜெகதீசன் ஆணையப் பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொள்கிறதா, இல்லையா? அரசு அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகளின் தற்போதைய நிலை என்ன? எந்த நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளன, எவை தொடர்ந்து நடைபெறுகின்றன? எனச் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து, ஆணையப் பரிந்துரைகள், இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்கிய விவரங்கள், அதிகாரிகள் மீதான துறை ரீதியான நடவடிக்கைகள் அனைத்தையும் உள்ளடக்கிய விரிவான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய அரசுத் தரப்பில் ஒரு வார கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ஒரே ஒரு இன்ஸ்பெக்டர் மட்டும் 16 பேரையும் சுட்டாரா? ஸ்டெர்லைட் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி கேள்வி!