திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் திரண்ட நிலையில், “அரோகரா” கோஷம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்ற காட்சி பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக போற்றப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆவணித் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.
திருவிழாவையொட்டி தினமும் சுவாமியும் அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10ஆம் திருநாள் தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
இதையும் படிங்க: “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...” - திருச்செந்தூரில் ஆவணித்திருவிழா கொடியேற்றம் கோலாகலம்... முழு விவரம் இதோ...!

இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 5.30 மணிக்கு விசுவரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் தேரில் எழுந்தருளினார்.
முதலில் விநாயகர் தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து நிலையத்தை அடைந்தது. அதனைத் தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி-தெய்வானை அம்பாள் எழுந்தருளிய தேர் புறப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பக்தி முழக்கங்களுடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்த தேர் பின்னர் நிலையை வந்தடைந்தது.
இதைத்தொடர்ந்து வள்ளியம்பாள் எழுந்தருளிய தேரும் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது.
தேரோட்டத்தை முன்னிட்டு திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார் தலைமையில் சுமார் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்கள் பாதுகாப்பாக திருவிழாவில் பங்கேற்க தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
இதையும் படிங்க: டபுள் டமாக்கா..! "இனி ஆன்லைனில் திருச்செந்தூர் பிரசாதம்".! பக்தர்கள் குஷி.!!