போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்கள் மீது எந்தவிதமான குற்றவியல் அல்லது சட்ட நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அந்த உத்தரவுக்குப் பிறகும் கல்லூரி மாணவருக்கு கிரேட்டர் நொய்டா நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியதாக முன்வைக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க உள்ளதாக உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, கடந்த ஜூலை மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் மாணவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மாணவர்கள் மற்றும் குற்றப் பின்னணி இல்லாதவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட்டிருந்தது. மேலும், போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருந்தது.
இதையும் படிங்க: டாக்டர்களை தாக்கினால் சும்மா விடமாட்டோம்! அரசியல்வாதிகளை கைது செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கவுதம புத்தா பல்கலைக்கழக மாணவரும், இந்திய மாணவர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினருமான அக்ஷத் திரிபாதிக்கு, டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்றது தொடர்பாக கிரேட்டர் நொய்டா நிர்வாகம் கடந்த செப்டம்பர் 4-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மூத்த வழக்கறிஞர் பிஸ்வஜீத் பட்டாச்சார்யா மாணவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவரத்தை நீதிமன்றத்தில் தெரிவித்தார். இது உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுக்கு முரணான நடவடிக்கை என அவர் வாதிட்டார்.
நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டதாக தகவல் வெளியானாலும், அதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு எதுவும் வழங்கப்படவில்லை என்றும் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து, தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, கிரேட்டர் நொய்டா அதிகாரிகளிடம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்க உள்ளதாக தெரிவித்தது. “மாணவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கக்கூடாது” என முந்தைய உத்தரவிலேயே தெளிவாக கூறியுள்ளதாக தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாக அதிகாரிகளிடம் பெறப்படும் விளக்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: பா.சிதம்பரத்திற்கு அரசு பதவி கொடுத்த முதல்வர் விஜய்? கோபித்துக் கொண்ட ராகுல்காந்தி! காங்கிரசில் சர்ச்சை!