ஈரான் போர் பதற்றம் காரணமாக மூலப்பொருட்கள் விலை உயர்வால் துணிகளுக்கு சாயமிட கிலோவுக்கு 20 ரூபாய் உயர்வு. 15 நாட்களுக்கு தேவையான சாயங்கள் மட்டுமே இருப்பு உள்ளதாகவும், போர் பதட்டம் நீடிக்கும் பட்சத்தில், சாய ஆலைகள் மூடப்படும் சூழல் உருவாகும் என சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்தி ராஜன் தெரிவித்துள்ளார்.
ஈரான் போர்பதற்றம் காரணமாக, மூலப் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மூலப் பொருட்கள் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக சாய ஆலைகள் பாதிப்படைந்து வருவதாகவும் இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள சாய ஆலை உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துணிகளுக்கு சாயமிட கிலோவுக்கு ரூ. 20 ரூபாய் வரை உயர்த்தி கட்டணம் நிர்ணயம் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்தி ராஜன் கூறுகையில், அமெரிக்க ஈரான் போர் காரணமாக மூலப்பொருட்கள் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளதால் தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 10 , 15, 20 ரூபாய் என நிறங்கள் அடிப்படையில் கட்டண உயர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பின்னலாடை நிறுவனங்கள் இதற்கு உதவி செய்ய வேண்டும். இல்லை எனில் சாய ஆலை நிறுவனங்கள் மூடப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: வட போச்சே..!! தவெகவுக்கு கொடுத்த ஆதரவு வாபஸ்... அந்த பல்ட்டி அடித்த கட்சி..!!
சாயமிட தேவையான மூலப்பொருட்களான சிலிண்டர் கிலோ 60 ல் இருந்து 104 ரூபாயாக உயர்ந்துள்ளது. பெராக்ஸைடு 26 ரூபாயில் இருந்து 65 ரூபாயாக உயர்ந்துள்ளது. அசிடிட்டிக் ஆசிட் 46 ரூபாயில் இருந்து 100 ரூபாய் என மூலப்பொருட்கள் அனைத்தும் 20 சதவீதம் முதல் 2 மடங்கு விலை உயர்ந்துள்ளது.
எனவே சாயமிட கிலோவுக்கு 60 ரூபாய் பெறப்பட்ட லேசான நிற வகைக்கு 70 ரூபாயும், 80 ரூபாய் பெறப்பட்ட இடை நிறத்திற்கு 95 ரூபாயும், 100 ரூபாய் பெறப்பட்ட அடர் நிறங்களுக்கு 120 ரூபாய் என கட்டணம் உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த போர் பதற்றம் நீடிக்கும் பட்சத்தில் துணிகளுக்கு தேவையான சாயங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் எனவும், அவ்வாறு தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் பெரும்பாலான சாயலைகள் தங்களது பணிகளை நிறுத்த வேண்டிய சூழல் உருவாகும்.
இதனால் பின்னலாடை ஏற்றுமதி வெகுவாக பாதிக்கும். தற்போதைய சூழலில் திருப்பூரில் இயங்கி வரும் 80 சதவீத சாய ஆலைகளில் அடுத்து வரும் 10 முதல் 15 நாட்களுக்கான சாயங்கள் மட்டுமே இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே போர் பதற்றங்கள் உடனடியாக முடிவுக்கு வந்தால் மட்டுமே சாய் ஆலைகளை தொடர்ந்து இயக்க முடியும். அவ்வாறு இல்லாமல் போர் பதட்டம் தொடர்ந்து நீடித்தால் அடுத்த 15 நாட்களுக்கு பிறகு முழுமையாக சாய ஆலயங்கள் முடங்கும் அபாயம் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “விஜய் அமித்ஷாவின் ஸ்லீப்பர் செல்” - தவெகவிற்கு சம்மட்டி அடி... ஒரே போடாய் போட்ட ரகுபதி...!