தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரிய கட்சிகளின் நீண்டகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆட்சியை கைப்பற்றிய தவெக, லஞ்சம் மற்றும் ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவதாக தேர்தல் காலத்தில் உறுதியளித்திருந்தது. அந்த வாக்குறுதிகளுக்கு ஏற்ப முதல் பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் இடம்பெறுகின்றன என்பது குறித்து மாநிலம் முழுவதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களின் கவனம் திரும்பியுள்ளது. மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது, ஆண்டுக்கு ஆறு இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்குவது, விவசாயிகளின் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது, அண்ணன் சீர் வரிசை திட்டம், அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் மற்றும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை உள்ளிட்ட பல அறிவிப்புகள் தேர்தல் வாக்குறுதிகளாக வெளியிடப்பட்டிருந்தன.
இதற்கிடையில், புதிய அரசு பதவியேற்ற பிறகு 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் மற்றும் சிங்க பெண் பாதுகாப்புப் படை ஆகிய திட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சொல் புத்தியும் இல்ல... சுயபுத்தியும் இல்ல... சி.எம். விஜயை விளாசிய திமுக முன்னாள் அமைச்சர்...!
இருப்பினும், தேர்தலில் அறிவிக்கப்பட்ட பல முக்கிய வாக்குறுதிகள் இன்னும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இதனால், இன்று தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையில் அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் செயல்பாட்டு அறிவிப்புகள் இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னதாக திமுக ஆட்சிக் காலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தற்போது புதிய அரசின் முதல் முழுமையான பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு கூடும் சட்டமன்ற கூட்டத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் மூலம் 2026–27ஆம் நிதியாண்டுக்காக தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை வேளாண்துறை அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கிறார்.
பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் கல்வித்துறையை மையமாகக் கொண்ட பல்வேறு புதிய திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறலாம் என அமைச்சர்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளனர். வழக்கமான அணுகுமுறையிலிருந்து விலகி, புதிய சிந்தனையுடன் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுவதால், தவெக அரசின் முதல் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: உதயநிதியை இன்றே விடுவிக்க ஆணை..! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!