தமிழகத்தின் தொழில் உள்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், தென் மாவட்டமான தூத்துக்குடியில் ஒரு மாபெரும் சர்வதேச கப்பல் கட்டுமானத் திட்டம் (Shipbuilding Project) அமையவுள்ளது. தென் கொரியாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் உலகின் முன்னணி கப்பல் கட்டும் நிறுவனமான எச்டி கேஎஸ்ஓஇ (HD KSOE) நிறுவனத்தின் உயர் மட்டப் பிரதிநிதிகளுடன், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 17, 2026) மிக முக்கியமான உத்தியோகபூர்வ ஆலோசனையை மேற்கொண்டார். இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவது குறித்துத் தமிழக அரசு மற்றும் தென் கொரிய நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் முறைப்படி கையெழுத்தாகியுள்ளது.

சுமார் ரூ.38,000 கோடி பிரம்மாண்ட முதலீட்டில் அமையவுள்ள இந்த அதிநவீன கப்பல் கட்டும் திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டைச் சேர்ந்த குறிப்பாகத் தென் மாவட்ட இளைஞர்கள் சுமார் 15,000 பேருக்குப் புதிய நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கவுள்ளன. தூத்துக்குடிக்கு அண்மையில் வஉசி துறைமுக விரிவாக்கப் பணிகள் மற்றும் விண்வெளி ஏவுதளத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த சர்வதேச முதலீடும் அங்கு ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டம் ஆசியாவின் மிக முக்கியப் பொருளாதார மற்றும் கடல்சார் வர்த்தக மையமாக மாறும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் பயங்கரம்.. இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மோஹித் உள்பட 3 பேர் கைது!
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்குத் தேவையான நிலப்பரப்பு, உள்கட்டமைப்பு வசதிகள், தடையில்லா மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் போன்ற புரோட்டோகால் தேவைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. உலகளாவிய கடல்சார் வணிகத்தில் தூத்துக்குடியின் புவியியல் அமைப்பைப் பயன்படுத்திக் கொள்ள இந்தத் திட்டம் ஒரு உன்னத அடித்தளமாக அமையும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தவெக அரசு பொறுப்பேற்ற ஒரே மாதத்திற்குள், தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சியை அசுர வேகத்தில் ஊக்குவிக்கும் வகையிலான இந்த மெகா முதலீட்டுத் திட்டத்தை முதல்வர் விஜய் முன்னெடுத்துள்ளது தொழில் துறையினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: விளாத்திகுளம் வழக்கில் தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டைத் தூக்குத் தண்டனை! தீர்ப்பை வரவேற்றார் முதல்வர் விஜய்!