தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் கீழ்மட்ட வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தில் இன்று செங்கல்பட்டு, திருச்சி, மதுரை உள்ளிட்ட 21 மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலான பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய 21 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாகச் செங்கல்பட்டு மாவட்டம் கொக்காரத்தாங்கலில் 8 செ.மீ மழையும், தஞ்சாவூர் பூதலூர் மற்றும் திருவாரூர் நீடாமங்கலத்தில் தலா 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. வெப்பநிலை நிலவரத்தைப் பொறுத்தவரைத் திருச்சி விமான நிலையத்தில் அதிகபட்சமாக 39.2°C பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தென் தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மண்டல வானிலை ஆய்வு மையம் திட்டவட்டமாக எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை!