அமெரிக்கா: ஈரானுக்கு எதிராக இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானுடன் அணுசக்தி தொடர்பான ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை அந்நாடு பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றும், இனி பொருளாதார ரீதியாக கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் குற்றம்சாட்டி வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் அதற்குப் பிறகு ஏற்பட்ட மோதல் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஈரான், அமெரிக்காவின் மத்திய கிழக்கு ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், எண்ணெய் மற்றும் எரிவாயு கொண்டு செல்லும் கப்பல்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் தாக்கம் சர்வதேச எரிசக்தி சந்தையிலும் ஏற்படக்கூடும் என்ற அச்சம் உருவானது. இதனால் மோதலை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு தரப்புகளில் இருந்து அழுத்தம் அதிகரித்தது.
இதையும் படிங்க: நிபந்தனைகள் நிறைவேறும் வரை ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க மாட்டோம்! அமெரிக்காவுக்கு ஈரான் சவால்!
இந்த சூழலில், டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் ஈரானுக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுடன் ஒப்பந்தம் செய்வதற்கு தாம் பல வாய்ப்புகளை வழங்கியதாகவும், ஆனால் அவற்றை ஈரான் ஏற்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈரானுக்கு எதிரான நடவடிக்கை “இதுவரை ஒரு நாட்டின் மீது மேற்கொள்ளப்பட்டதிலேயே மிகக் கடுமையான பொருளாதார நடவடிக்கையாக இருக்கும்” என டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் இதை பொருளாதாரப் போர் மற்றும் சர்வதேச தனிமைப்படுத்தலாக மாற்றப்போவதாகவும் எச்சரித்துள்ளார்.
ஈரானுக்கு நிதி அல்லது வர்த்தக உதவி செய்யும் பிற நாடுகளுக்கும் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானுக்கு உதவும் நிதி நிறுவனங்கள், நிறுவனங்கள், விமான நிலையங்கள் அல்லது அரசு அமைப்புகள் மிகப்பெரிய பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
எண்ணெய் கடத்தல், பணப் பரிமாற்றம், நாணயப் பரிமாற்றம், கப்பல் பதிவு சேவைகள் மற்றும் பினாமி நிறுவனங்கள் வாயிலான உதவிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
ஈரானை தனிமைப்படுத்த அமெரிக்காவின் நட்பு நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், ஈரான் அணு ஆயுதத்தை ஒருபோதும் பெற அனுமதிக்கமாட்டோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த அறிவிப்பு மத்திய கிழக்கில் ஏற்கனவே நீடித்து வரும் பதற்றத்தை மேலும் அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்காவில் படித்த பிறகு வேலை வேண்டுமா? ரூ.96 லட்சம் கட்டணம் விதிக்க டிரம்ப் திட்டம்... இந்திய மாணவர்களுக்கு அதிர்ச்சி!