கியூட்டோ/வாஷிங்டன்: ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின் பேரில், ஈக்வடாரில் உள்ள போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து அமெரிக்கா-ஈக்வடார் கூட்டு ராணுவ நடவடிக்கை தொடங்கியுள்ளது. இது டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் லத்தீன் அமெரிக்க போதை கும்பல்களுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தும் முக்கிய அடியாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க தெற்கு கட்டளை (US Southern Command) வெளியிட்ட அறிக்கையில், "ஈக்வடாரில் 'நியமிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகள்'க்கு எதிராக ஈக்வடார் மற்றும் அமெரிக்க படைகள் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன. போதைப்பொருள் தீவிரவாதம் (narco-terrorism) மற்றும் சட்டவிரோத செயல்களை எதிர்த்து இணைந்து போராடுகிறோம். ஈக்வடார் மக்களின் தைரியத்தையும் உறுதியையும் பாராட்டுகிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈக்வடார் அதிபர் டேனியல் நோபோவா, டிரம்பின் நெருங்கிய நட்பாளராக இருப்பவர். அவர் "புதிய கட்டம்" என அழைத்து, அமெரிக்கா உள்ளிட்ட பிராந்திய நட்பு நாடுகளுடன் இணைந்து போதை கும்பல்களுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தியுள்ளார். லாஸ் சோனெரோஸ் (Los Choneros), லாஸ் லோபோஸ் (Los Lobos) போன்ற கும்பல்கள் அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்புகளாக நியமிக்கப்பட்டுள்ளன. இவை ஈக்வடாரின் துறைமுகங்களை பயன்படுத்தி கொகைன் கடத்தி வருகின்றன.
இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்திக்குப் பதில் செங்கடல்!! சவுதி புது முடிவு!! வர்த்தகத்தை துவக்க அராம்கோ முடிவு!
அமெரிக்க சிறப்பு படைகள் ஈக்வடார் கமாண்டோக்களுக்கு ஆலோசனை, ஆதரவு அளித்து வருகின்றன. இது ஈக்வடாரில் நடக்கும் முதல் நில நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. டிரம்ப் நிர்வாகம் கடந்த செப்டம்பர் முதல் கரீபியன், பசிபிக் பகுதிகளில் போதை கப்பல்கள் மீது 40க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தியுள்ளது. இப்போது நிலப்பகுதிக்கு விரிவடைந்துள்ளது.
ஈக்வடாரில் போதை கும்பல்களால் வன்முறை, கொலைகள் உச்சத்தில் உள்ளன. நோபோவா அரசு இராணுவத்தை ஈடுபடுத்தி போராடி வருகிறது. அமெரிக்கா இதை "போதை தீவிரவாதத்துக்கு எதிரான போர்" என அழைக்கிறது. இந்த நடவடிக்கை லத்தீன் அமெரிக்காவில் போதை கும்பல்களுக்கு எதிரான டிரம்பின் கடுமையான கொள்கையின் அடுத்த கட்டமாக பார்க்கப்படுகிறது. உலக நாடுகள் இதை கண்காணித்து வருகின்றன.
இதையும் படிங்க: திருப்பதி சென்ற பக்தர்களுக்கு நேர்ந்த பரிதாபம்... கார் மீது லாரி மோதி 5 பேர் துடிதுடித்து பலி...!