தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் (தவெக) கட்சியில் தீவிரமாகப் பணியாற்றி வந்த அஜிதா ஆக்னல், கட்சியின் முக்கிய நிர்வாகியாக அறியப்பட்டவர். கட்சியின் ஆரம்ப காலம் முதலே தூத்துக்குடி பகுதியில் பெண்கள் உள்ளிட்ட பலரை இணைத்து, கட்சியை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
2025 டிசம்பர் 23ஆம் தேதி தவெக மாவட்டச் செயலாளர்கள் நியமனம் அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் பதவி தனக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்த அஜிதா, சென்னை பனையூர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். ஆனால், பட்டியலில் தன் பெயர் இல்லாததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். விஜய்யை நேரில் சந்தித்து முறையிட முயன்றும் முடியவில்லை.

அலுவலகத்துக்கு விஜய் வரும்போது, அஜிதாவும் அவரது ஆதரவாளர்களும் காரை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அங்கேயே தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். “பொறுப்பு கிடைக்காவிட்டாலும் கட்சிக்காக உழைப்பேன்” என அப்போது அவர் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: அமித் ஷா மகனுடன் சபரீசனுக்குத் தொடர்பு! அமலாக்கத்துறை மௌனம் காப்பது ஏன் என ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சில நாட்களில் அஜிதா விபரீத முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினாலும், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் எவரும் அவரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்தது. மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் அஜிதாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய்யின் நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத் தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இது அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் தூத்துக்குடி விமான நிலையம் வந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரி சென்று, அங்கு தன் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தூத்துக்குடியில் விஜய்யை வரவேற்க அஜிதா செல்லவில்லை. அதே நேரத்தில் அவர் திமுகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகின.

இன்று திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியை நேரில் சந்தித்து அஜிதா ஆக்னல் திமுகவில் இணைந்தார். இவரது சகோதரர் பில்லா ஜெகன் ஏற்கெனவே திமுக மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. இந்த இணைப்பு தூத்துக்குடி அரசியல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவங்கள் தவெகவுக்குள் உள்ள உள் மோதல்களையும், பதவி எதிர்பார்ப்புகளால் ஏற்படும் அதிருப்திகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அஜிதா ஆக்னல் போன்ற தீவிர பணியாளர்களின் பங்களிப்பை கட்சி மதிப்பிடத் தவறியதாகவும், அதன் விளைவுகள் இப்போது தெரிய வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. திமுகவில் இணைந்த பிறகு அஜிதாவின் அரசியல் பயணம் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: தமிழக பாஜக தொண்டர்களை எண்ணி பெருமைப்படுகிறேன்! பிரதமர் மோடி புகழாரம்!