வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு (FCRA-2026) எதிராக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, வெறும் வாக்கரசியலுக்காக நடத்தப்படும் தேவையற்ற விளம்பர நாடகம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாகச் சாடியுள்ளார்.
வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதா குறித்துத் தவெக அரசு மக்களிடையே தேவையற்ற வீண் வதந்திகளையும் போலி பிம்பத்தையும் கட்டமைக்கக் கூடாது என்று வலியுறுத்தி நயினார் நாகேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எஃப்சிஆர்ஏ சட்டம் என்பது காங்கிரஸ் ஆட்சிக்காலமான 1976-இல் கொண்டுவரப்பட்டு, கால மாற்றத்திற்கு ஏற்ப 2010, 2016, 2018 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் திருத்தப்பட்டுள்ளது. ஆனால், இது ஏதோ மத்திய பாஜக அரசால் புதிதாகக் கொண்டுவரப்பட்ட சட்டம் போலவும், சிறுபான்மையின மக்களின் தொண்டு நிறுவனங்களுக்கு (NGO) வரும் நிதியை முடக்கும் சட்டம் போலவும் தவெக அரசு சித்தரிப்பது கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'மிஸ்டு கால்' மூலம் உறுப்பினர் சேர்க்கை! அண்ணாமலையின் 'வீ தி லீடர்ஸ்' உறுப்பினர் சேர்க்கையில் புதிய முறை!

தொண்டு நிறுவனங்களை முறையாகப் பதிவு செய்வது, விதிமுறைகளின்படி நிதியுதவி பெறுவது மற்றும் வரவு-செலவு அறிக்கைகளை வெளியிடுவது போன்ற வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதே இம்மசோதாவின் பிரதான நோக்கம். இதில் தொண்டு நிறுவனங்களின் நிதியை முடக்குவதற்கான எவ்வித சதியும் இல்லை" எனக் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு அமைப்பின் பதிவு ரத்து செய்யப்பட்டால் அதன் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்ற பழைய விதியை மாற்றி, அந்த அமைப்பு தனது பதிவை மீண்டும் மீட்டெடுக்கும் பட்சத்தில், அதன் அனைத்துச் சொத்துகளும் பயன்படுத்தப்படாத நிதிகளும் முழுமையாகத் திருப்பித் தரப்படும் என்பதைப் புதிய திருத்த மசோதா உறுதி செய்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
தேசப் பாதுகாப்பையும், தொண்டு நிறுவனங்களின் சமூகப் பாதுகாப்பையும் ஒருசேர உறுதி செய்யும் FCRA-2026 திருத்த மசோதாவைக் கண்மூடித்தனமாக எதிர்க்கும் போக்கைத் தவெக அரசும் மாற்றுக் கட்சியினரும் கைவிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மத்திய அரசின் எஃப்சிஆர்ஏ சட்டத் திருத்தத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட விவகாரத்தில், பாஜக மற்றும் தவெக இடையே தற்போது எழுந்துள்ள இந்த காரசார கருத்து மோதல் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: திமுக–பாஜக திடீர் நெருக்கம்?! முதல்வர் விஜய் தொகுதி மறுவரையறை கூட்டம் கூட்டியதன் பின்னணியில் பரபரப்பு!