தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர்.

குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகம் இருந்ததால், 9 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனதாக வந்த தகவல் கூட்டத்தை இன்னும் குழப்பமானதாக்கியது. இதனால் ஏற்பட்ட அச்சத்தால் மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஜெயேந்திரரைச் சந்தித்த விஜய் அப்பா, அம்மா... நயினார் நாகேந்திரன் கொடுத்த பதிலடி...!
விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர்க்கட்சிகளின் கூட்டங்களுக்கு தகுந்த பாதுகாப்பு தரப்படுவதில்லை என குற்றம் சாட்டினார். காவல்துறையின் மெத்தன போக்கே இதற்கு காரணம் என்றும் கூறினார். 10 லட்சம் கொடுத்து ஒரு உயிரை வாங்க முடியுமா என்றும் தமிழக அரசு 39 பேர் உயிரிழப்புக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: சமூக நீதி எல்லாம் அரசியல் நேரத்து சாயம் தானா? முதல்வரை விளாசிய நயினார்...!