தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல நாட்கள் ஆகியும், புதிய ஆட்சி அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பு ஆளுநர் மாளிகையிலிருந்து இன்னும் வராத நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) இரண்டாவது முறையாக ஆளுநரைச் சந்தித்துள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் (லோக் பவன்) ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை தவெக நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்தனர். தவெக நிர்வாகிகள் மட்டும் இன்றி, கட்சியின் சட்ட ஆலோசனைக் குழுவினரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். விஜய் ஏற்கனவே 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்திருந்தாலும், அதற்கான எழுத்துப்பூர்வமான ஆதரவு கடிதங்களைச் சமர்ப்பிப்பதில் நிலவும் சிக்கல்கள் குறித்துச் சட்ட ரீதியான விளக்கங்களை அளிக்க இந்தச் சந்திப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது.

தவெக தரப்பில் 118 பேர் ஆதரவு இருப்பதாக வாய்மொழியாக மட்டுமே கூறப்பட்டுள்ளதால், அதில் ஆளுநர் முழுத் திருப்தி அடையவில்லை என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. ஒருபுறம் தவெக-வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், பெரும்பான்மையைச் சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும் என ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. அதே நேரத்தில், தவெக-விற்குத் தங்களது ஆதரவு இல்லை என அதிமுக திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: “தவெகவுக்கு ஆதரவு இல்லை” - அதிமுக அதிரடி அறிவிப்பு: முற்றுப்புள்ளி வைத்தார் கே.பி. முனுசாமி!
இத்தகைய நெருக்கடியான சூழலில், ஆளுநரைத் தவெக-வின் சட்டக் குழுவினர் சந்தித்துள்ளது, விரைவில் ஆட்சி அமைப்பதற்கான அழைப்பைப் பெறுவதற்கான இறுதிக்கட்ட முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. நாளை காலை பதவியேற்பு விழா திட்டமிட்டபடி நடக்குமா என்பது இந்தச் சந்திப்பின் முடிவிலேயே தெரியவரும்.
இதையும் படிங்க: விஜய்க்கு ஆதரவா..? திருமா. நாளை முடிவு..! கூடுகிறது உயர்நிலை குழு கூட்டம்..!!