தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி மற்றும் ராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் திமுக சார்பில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுமக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிச் சிறப்பித்தார்.
சமீபத்தில் ஆறு மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டதை நினைவுகூர்ந்த அவர், "நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், குறிப்பாக மகளிரிடம் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சி அமைக்கும் எனத் தனது நம்பிக்கையைப் பதிவு செய்தார்.

தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். புதிய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைவில் முறையான அறிவிப்பை வெளியிடுவார் என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமித் ஷா பெயரை வைக்க சொன்னாலும் எடப்பாடி வைப்பார் - உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!
நாடு முழுவதும் நிலவும் சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடு குறித்த கேள்விக்குப் பதிலளித்த உதயநிதி, "இது தொடர்பாக முதலமைச்சர் ஏற்கனவே பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.

வரும் தேர்தலில் மீண்டும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியிலேயே போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு, யார் எங்கே போட்டியிட வேண்டும் என்பதை முதலமைச்சர் (கட்சித் தலைமை) தான் முடிவு செய்வார் எனப் பதிலளித்தார்.
தமிழக அரசு ஏற்கனவே சிலிண்டர் தட்டுப்பாட்டைச் சமாளிக்கத் தனது அதிகாரத்திற்கு உட்பட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், துணை முதல்வரின் இந்தப் பேச்சு அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: 4 ஆண்டுகால காத்திருப்பு! துணை முதல்வர் உதயநிதி வீட்டின் முன் பொதுமக்கள் கண்ணீர் போராட்டம்!