ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து புதிய தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், இந்தத் தகவல் மேற்காசியப் பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு, அந்நாட்டின் ராணுவ மத்திய கட்டளையகம் (CENTCOM) ஈரான் மீதான புதிய தாக்குதல் திட்டங்கள் குறித்து 45 நிமிடங்கள் ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் மூன்று முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன: ஈரானின் உட்கட்டமைப்புகளை இலக்காக்கிய சக்திவாய்ந்த தாக்குதல், ஹார்முஸ் ஜலசந்தியை கட்டுப்பாட்டில் கொண்டு வருதல், மற்றும் ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சிறப்புப் படைகள் மூலம் கையகப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.
இதையும் படிங்க: ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது! கச்சா எண்ணெய்யில் வருமானம் இல்லை!! ட்ரம்ப் சூசகம்!
இதற்கிடையே, கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு 6,500 டன் வெடிப் பொருட்கள் மற்றும் ராணுவத் தளவாடங்களை அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு சரக்குக் கப்பல்கள் மற்றும் பல விமானங்கள் மூலம் இந்தப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியான், “அமைதி பேச்சு நடந்து கொண்டிருக்கும் போதே அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது” என்று எச்சரித்துள்ளார். அமெரிக்கா மீதான நம்பிக்கை முற்றிலும் அழிந்துவிட்டதாகவும், ஏற்கனவே பேச்சு நடைபெற்றபோது இரு முறை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா தன் அதிநவீன ‘டார்க் ஈகிள் ஹைப்பர்சோனிக்’ ஏவுகணைகளைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொன்றின் விலை 125 கோடி ரூபாயாகும். ஒலியின் வேகத்தைவிட 5 மடங்கு வேகத்தில் செல்லும் இந்த ஏவுகணை 2,775 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது. இதைப் பயன்படுத்த டிரம்ப் ஒப்புதல் அளித்தால், அமெரிக்கா தன் வரலாற்றில் முதன்முறையாக ஒரு நேரடிப் போரில் ஹைப்பர்சோனிக் ஆயுதத்தைப் பயன்படுத்தும்.
ஈரான்-அமெரிக்கா இடையேயான பதற்றம் தொடரும் நிலையில், இந்த ராணுவ நகர்வுகள் போர் மீண்டும் தீவிரமடையும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளன. சர்வதேச அமைதிக்கான முயற்சிகள் தோல்வியடையும் அபாயம் உள்ளதாக உலக நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன.
இதையும் படிங்க: மேற்காசிய போர் தொடர்ந்தால்!! மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்!! புடின் எச்சரிக்கை!!