அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றது முதல் அமெரிக்காவின் முன்னேற்றத்துக்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக தொடர்ந்து கூறிவருகிறார். குறிப்பாக, அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில், உலக நாடுகளுக்கான இந்த வரி விதிப்பை அமெரிக்காவின் விடுதலை நாளான ஏப்ரல் 2-ம் தேதி அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

அமெரிக்காவை விட பிற நாடுகள்தான் எங்கள் நாட்டின் பொருட்கள் மீது அதிக வரிகளை விதிக்கின்றன. இதனால், அமெரிக்காவின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதோடு, இங்குள்ள உற்பத்தியாளர்களுக்கும் கூடுதல் நிதிச் சுமை ஏற்படுகிறது. இதனை சரி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நான் இல்லைனா தோத்துருப்ப.. நன்றி கெட்டவன்! எலான் மஸ்க் - டிரம்ப் இடையே முற்றும் மோதல்..!
அமெரிக்கா பொருட்களுக்கு இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் விதிக்கும் வரியை விட அமெரிக்காவில் அவர்களின் பொருட்களுக்கு பாதி அளவு வரி விதிப்பதன் மூலம் அவர்களிடம் கருணை காட்டியுள்ளேன். அவர்களுக்கு சிறப்பு சலுகை அடிப்படையில் பரஸ்பர வரி விதிக்கப்படுகிறது என்றும் ட்ரம்ப் அப்போது விளக்கம் அளித்தார்.

ட்ரம்பின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கைக்கு கனட பிரதமர் மார்க் கார்னி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனீஸ், அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்ட்டின், இத்தாலி பிரதமர் மெலோனி, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வர்த்தக போரை உருவாக்கும் இந்த விவகாரத்தை எதிர்த்து போராட தயாராகி விட்டதாகவும், வரி விதிப்பு தொடர்பாக ட்ரம்பிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் ஸ்டீல், அலுமினியம் இறக்குமதி வரியை 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். 25 சதவீத வரி விதித்தால், மதில் மீது ஏறி உள்ளே குதித்து விடுகின்றனர்.
50 சதவீதம் வரி என்றால் அப்படி செய்ய முடியாது என்றும் அவர் கூறினார். 4ம் தேதி அமலுக்கு வந்துவிட்ட இந்த வரி விதிப்பில், பிரிட்டனுக்கு மட்டும் டிரம்ப் விலக்கு அளித்திருக்கிறார். அதிபர் டிரம்ப்பின் இந்த முடிவால், இந்தியா உட்பட சர்வதேச வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் பெரும்பாலான ஸ்டீல், அலுமினிய பொருட்கள் மஹாராஷ்டிரா, குஜராத், தமிழகம் ஆகிய மாநிலங்களின் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தயாரிக்கின்றன. அமெரிக்காவின் இருமடங்கு வரி விதிப்பால் ஏற்றுமதி குறைந்து, இந்திய நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்திக்கும் என்றும், வேலையிழப்பு ஏற்படும் என்றும் அச்சம் எழுந்துள்ளது.

இந்தியாவில் ஏற்கனவே குறைந்த விலை இரும்பு, அலுமினிய பொருட்கள் இறக்குமதி அதிகமாக இருப்பதுடன், அமெரிக்காவின் இருமடங்கு வரி விதிப்பும் சேர்ந்து, நிலைமையை மோசமாக்கி இருப்பதாக, 'அலுமினியம் அசோசியேஷன் ஆப் இந்தியா' கவலை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசின் புதிய வரி விதிப்பு, இந்திய ஏற்றுமதியில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என, 'இன்ஜினியரிங் எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சில் ஆப் இந்தியா' எச்சரித்துள்ளது. மத்திய கனரக தொழில் அமைச்சர் குமாரசாமி கூறும்போது, அமெரிக்காவின் நடவடிக்கையால் இந்திய ஸ்டீல், அலுமினிய தொழிலில் சிறிய பாதிப்பே ஏற்படும். இந்தியா பெரிய அளவில் ஏற்றுமதி செய்வதில்லை என்பதால் பிரச்னையில்லை என்றார்.
இதையும் படிங்க: போர் நிறுத்த ஒப்பந்தத்தை உடைத்தெறிந்த அமெரிக்கா..! இஸ்ரேல் - ஹமாஸ் போரால் செத்து அழியும் காசா மக்கள்..!