பெண்களைத் தரக்குறைவாகவும் கேவலமாகவும் விமர்சிப்பவர்களுக்கு நட்சத்திரப் பேச்சாளர் என்று பட்டம் வழங்கி திமுக ஆட்சி கொண்டாடுவதாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் சாடியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரத்தில் பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது புகாரளிக்கச் சென்ற 5 மாதக் கர்ப்பிணி பெண்ணையும் உடன் வந்த மற்ற இரண்டு பெண்களையும் காவலர் ஒருவர் சரமாரியாகத் தாக்குவதாக வெளியாகியுள்ள காணொளி காட்சிகளும் அதுகுறித்த செய்திகளும் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன.

புகாரின் பின்னணியும் உண்மைத் தன்மையும் எதுவாக இருப்பினும் புகாரளிக்க வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு காவலர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? தமிழகக் காவல் நிலையங்கள் எல்லாம் கட்டப்பஞ்சாயத்து கூடாரங்களாக உருமாறிவிட்டதா?
இதையும் படிங்க: காதலியை சந்திக்க சென்ற இளைஞர் மர்ம மரணம்... பெண் வீட்டார் கட்டுக்கதை... நியாயம் கேட்ட வானதி சீனிவாசன்!!

அதுவும் ஈருயிராய் இருக்கும் ஏழை கர்ப்பிணி பெண்ணை ஈவு இரக்கமின்றி தாக்குவது மன்னிக்க முடியாத பாவம். தமிழகத்தில் பாதிக்கப்பட்டப் பெண்களின் பக்கம் நிற்க வேண்டிய காவல்துறை பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக கைகோர்த்து தொடர்ந்து அவர்களைக் காப்பாற்றத் துடிப்பது வெட்கக்கேடு.

தமிழகத்தின் சாபக்கேடு. பெண்களைத் தரக்குறைவாகவும் கேவலமாகவும் விமர்சிப்பவர்களுக்கு "நட்சத்திரப் பேச்சாளர்" என்று பட்டம் வழங்கி கொண்டாடும் திமுக ஆட்சியில், பெண்களுக்கான கண்ணியத்தையும் மரியாதையையும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்பது மீண்டுமொருமுறை நிரூபணமாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாடே கொதித்து போய் இருக்கிறது... திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!!