தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் திமுக தலைமையிலான கூட்டணி மீது கடும் அதிருப்தியில் உள்ளார். தொகுதிப் பங்கீடு மற்றும் தனது 10 அம்சக் கோரிக்கைகளை திமுக நிறைவேற்ற மறுப்பதால், கூட்டணியில் தொடர்வதா அல்லது வெளியேறுவதா என்பது குறித்து இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார். இந்த நிலைமை தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட வேல்முருகன், இந்த முறை கூடுதல் ஒரு தொகுதி மற்றும் தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என திமுகவிடம் வலியுறுத்தினார்.
மேலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு, ஈழத் தமிழர்களுக்கான பொது வாக்கெடுப்பு, தமிழக அரசு வேலைகளில் 100% உள்ளூர் இடஒதுக்கீடு, மத்திய அரசு வேலைகளில் 80% தமிழர்களுக்கு இடஒதுக்கீடு, கோவில்களில் தமிழில் அர்ச்சனை, சுங்கக் கட்டணம் ரத்து உள்ளிட்ட 10 முக்கிய கோரிக்கைகளையும் முன்வைத்தார்.
இதையும் படிங்க: திடீர் திருப்பம்... திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்... வடமாவட்டங்களுக்கு வைக்கப்போகும் குறி...!

ஆனால் திமுக இந்தக் கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த முறை போலவே ஒரே ஒரு தொகுதியை மட்டும் உதயசூரியன் சின்னத்தில் தர முடியும் என திமுக தரப்பு தெரிவித்துள்ளது. இதனால் கடும் அதிருப்தியடைந்த வேல்முருகன், தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
நிர்வாகிகள் “கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என வலியுறுத்தியதாக வேல்முருகன் பேட்டியில் தெரிவித்தார். இதையடுத்து அமைச்சர் எ.வ. வேலு, விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்டோர் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் வேல்முருகன் சமாதானமாகவில்லை.
“திமுக உடனடியாக என்னை அழைத்துப் பேச வேண்டும். இல்லையெனில் கூட்டணியில் இருந்து வெளியேறுவேன்” என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், “இன்று திமுக தனது முடிவை அறிவிக்காவிட்டால், நானே எனது இறுதி முடிவை அறிவிப்பேன்” என்றும் கெடு விதித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள இந்த விரிசல் தமிழக அரசியலை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. வேல்முருகன் இன்று கூட்டணியில் இருந்து வெளியேறுகிறாரா? அல்லது திமுக அவரை சமாதானப்படுத்தி தக்க வைக்கிறதா? என்பதை இன்றைய அறிவிப்பே தீர்மானிக்கும்.
இதையும் படிங்க: வீட்டுக்கு ஒருத்தரா? புரிதல் இல்லாத இளம் தலைமுறை... விஜய் மறைமுகமாக சாடிய வேல்முருகன்..!!