கரூர் துயர சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் சிபிஐ நாளை விசாரணை நடத்தவுள்ள நிலையில், இன்று விஜய் டெல்லி புறப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பான விசாரணைக்கு இரண்டு முறை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விஜய் தனது விளக்கத்தை அளித்திருந்தார். மூன்றாவது முறையாக நாளை விசாரணைக்கு ஆஜராகும் படி சிபிஐ விஜய்க்கு சம்மன் கொடுத்துள்ளது.
இந்நிலையில் இன்றே விஜய் டெல்லி செல்ல புறப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த முறை விசாரணைக்கு ஆஜராகும் போதும், விஜய் முன்கூட்டியே தான் டெல்லிக்கு பயணித்திருந்தார். ஆனால் இந்த முறை முன்கூட்டியே பயணிப்பது அதுபோன்ற சாதாரண விஷயமாக இருக்காது எனக்கூறப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் தவெகவைக் கொண்டு வர சிபிஐ விசாரணை, ஜனநாயகன் படத்திற்கு சிக்கல் என பல குடைச்சல்களை பாஜக விஜய்க்கு கொடுத்து வந்தது. தற்போது பாஜகவின் அரசியல் அழுத்தம் காரணமாக விஜய் என்.டி.ஏ. கூட்டணியில் இணைய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் காணொலி காட்சி வாயிலாக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் தவெக தனித்து போட்டியிடலாமா அல்லது கூட்டணி அமைக்கலாமா என்பது தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மதுரை ஏர்போர்ட்டிற்கு கிடைச்சாச்சு சர்வதேச அந்தஸ்து..!! வெளியானது அறிவிப்பாணை..!! தென் தமிழகத்துக்கு பெரும் வரப்பிரசாதம்..!!

இந்த ஆலோசனையின் போது பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும், திமுகவுடன் எக்காரணம் கொண்டும் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி வைக்காது என்பதை நன்கு அறிந்த பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் கூட்டணி வைக்க ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த தகவல் நேற்று என்.ஆனந்த் மூலமாக விஜய்க்கும் தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் அவசர, அவசரமாக டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்பட்டு வருகிறது.
இன்று டெல்லி செல்லும் விஜய் அங்கு பாஜக முக்கிய தலைவர்களுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கூட்டணி உறுதியாகும் பட்சத்தில், மிக விரைவில் அதனை விஜய் அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தடுத்து நிறுத்தப்பட்டார். விமான நிலையம் உள்ளே சென்றபோது செய்யப்பட்ட சோதனையில் கூர்மையான பொருள் அவரது கைப்பையில் இருந்ததால் தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜயை தடுத்து நிறுத்திய விமான நிலைய காவலர்கள் அவரை அமர வைத்துள்ளதால் டெல்லி புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கரூர் பெருந்துயிரம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு ஆஜராக ஒரு நாள் முன்னதாக விஜய் டெல்லி புறப்பட்ட நிலையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: கரூர் பெருந்துயரம்... தவெக தலைவர் விஜய்க்கு மீண்டும் சம்மன்..!! சிபிஐ அதிரடி..!!