சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய் இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், சி.ஜோசப் விஜய்க்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். “சி.ஜோசப் விஜய் எனும் நான்...” என அவர் உறுதிமொழி ஏற்றபோது அரங்கம் முழுவதும் தொண்டர்களின் ஆர்ப்பரிப்பால் அதிர்ந்தது.
கோட்சூட் அணிந்து பிரமாண்டமான வரவேற்புக்கு மத்தியில் பதவியேற்ற விஜய், உடனடியாக மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். முதல் கோப்பு, இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டம்.
இரண்டாவது, பெண்கள் மற்றும் சிறுமியரின் பாதுகாப்பை உறுதி செய்யும் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ அமைக்கும் ஆணை. மூன்றாவது, இளைஞர்களை போதைப்பொருள் பிடியில் இருந்து காப்பாற்ற ‘போதைப்பொருள் தடுப்புப் படை’ அமைக்கும் கோப்பு. இந்த உடனடி நடவடிக்கைகள் புதிய அரசின் மக்கள் நலன் நோக்கத்தை வெளிப்படுத்தியதாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆண்டவன் மீது ஆணையிட்டு பதவியேற்றார் விஜய்!! கண்ணீர் மல்க கண்டு ரசித்த பெற்றோர்! உணர்ச்சிமிகு தருணங்கள்!!

இந்தப் பதவியேற்பு விழாவில் ‘வந்தே மாதரம்’ பாடல் முதல் முறையாக பாடப்பட்டது. தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தும் ஒலித்தன. காங்கிரஸ் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, விஜயின் பெற்றோர் சந்திரசேகர் மற்றும் ஷோபா, நடிகை திரிஷா, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டணிக் கட்சிகளின் எம்எல்ஏக்களும் விழாவில் கலந்துகொண்டு விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், சி.டி.ஆர். நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே. பிரபு, கீர்த்தனா ஆகிய 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

நடிகராக புகழ் பெற்ற விஜய், அரசியலில் நுழைந்து சொற்ப காலத்தில் முதலமைச்சர் பதவிக்கு உயர்ந்துள்ளது தமிழக அரசியல் வரலாற்றில் தனித்துவமான தருணம். புதிய அரசு மக்கள் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதை ஒழிப்பு ஆகிய மூன்று முக்கிய அறிவிப்புகள் ஏற்கெனவே மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
தமிழகம் முழுவதும் இன்று கொண்டாட்ட மனநிலை நிலவுகிறது. விஜயின் தலைமையில் புதிய அரசு எப்படியான சாதனைகளைப் படைக்கும் என மக்கள் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க: Breaking News! விஜயுடன் சேர்த்து மொத்தம் 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு! அமைந்தது புதிய அமைச்சரவை!!