மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பு சூழல் இரண்டாவது நாளாக கடுமையாக பதற்றமடைந்துள்ளது.ஈரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தொடர்ந்து ட்ரோன் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைமை மதகுரு அலி கமேனி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கப்படும் என ஈரான் முன்பு அறிவித்திருந்த நிலையில், அந்த எச்சரிக்கைக்கு இணையாக தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.
ஐக்கிய அரபு அமீரகம் மீது ஏவப்பட்ட 541 ட்ரோன்களில் 506 ட்ரோன்களும், 165 பாலிஸ்டிக் ஏவுகணைகளில் 152 ஏவுகணைகளும் இடைமறிக்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும், சில தாக்குதல்கள் இலக்கை சென்றடைந்ததாகவும், மூவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. சவுதி அரேபியா தலைநகர் ரியாத் மற்றும் உலகளாவிய வர்த்தக மையமாக விளங்கும் துபாய் ஆகிய பகுதிகளிலும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பாய்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குவைத் மீது ஏவப்பட்ட 97 ஏவுகணைகள் மற்றும் 283 ட்ரோன்களில் பெரும்பாலானவை தடுக்கப்பட்டதாகவும், சர்வதேச விமான நிலையம் அருகே தாக்குதல் முயற்சி நடந்ததாகவும் கூறப்படுகிறது. பக்ரைன் நாட்டில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5-ஆவது பிரிவு தலைமையகம் குறிவைக்கப்பட்டதாகவும், தலைநகர் மனாமாவில் கட்டிட சேதம் ஏற்பட்டதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
வளைகுடா கடல் பகுதியிலும் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பலை நோக்கி நான்கு ஏவுகணைகள் ஏவப்பட்டதாக ஈரான் கூறியுள்ளதுடன், அதற்கு அமெரிக்கா அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வழங்கவில்லை. சர்வதேச எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியமான Strait of Hormuz பகுதியில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஓமன் தெரிவித்துள்ளது. அந்த கப்பலில் இந்திய மாலுமிகள் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் இந்தியாவிலும் கவலை நிலவுகிறது. வளைகுடா நாடுகள் தற்காலிகமாக வான்வெளியை மூடியதால் ஆயிரக்கணக்கான விமானப் பயணிகள் பல இடங்களில் சிக்கியுள்ளனர்; பல நாடுகள் தங்கள் குடிமக்களை மீட்க அவசர நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன.
இதையும் படிங்க: பழிக்குப்பழி..! இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்? குறி வைத்த ஈரான்..!!
இதற்கிடையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப் படைகள் ஈரானின் தலைநகர் தெஹரைன் மீது கடுமையான வான்வழித் தாக்குதலை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெஹ்ரானின் மையப்பகுதிகளில் வெடிப்பு சத்தங்கள் கேட்கப்பட்டதாகவும், பல இடங்களில் சேதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேலில் ஏற்பட்ட தாக்குதல்களில் 10 பேர் உயிரிழந்ததாகவும், 120-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர், “ஈரானின் ராணுவ மற்றும் தலைமை அமைப்புகளை குறிவைத்து தாக்குதல் தொடரும்” என எச்சரித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட கூட்டுத் தாக்குதலில் ஈரானில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில், ஈரானின் பதிலடி தாக்குதலில் மூன்று அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்க உள்நாட்டு அரசியலிலும் இந்த ராணுவ நடவடிக்கை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தகவல் வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், வெள்ளை மாளிகை அதை மறுத்துள்ளது. ஜனநாயகக் கட்சி தலைவர்களுக்கு தேவையான தகவல் முன்கூட்டியே பகிரப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த தாக்குதல்களில் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகள் பலவீனப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டிருந்த நிலையில், தற்போதைய மோதல் நீண்டகால ராணுவச் சிக்கலாக மாறும் அபாயம் இருப்பதாக சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். மத்திய கிழக்கில் உருவாகியுள்ள இந்த பதற்றம், உலகளாவிய எண்ணெய் விநியோகம், சர்வதேச கடல் மற்றும் விமானப் போக்குவரத்து, ஆற்றல் சந்தை நிலைமை மற்றும் பல நாடுகளின் பாதுகாப்பு சூழ்நிலைகளில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த மோதல் மேலும் தீவிரமடையுமா என்ற அச்சம் உலக நாடுகள் முழுவதும் அதிகரித்து வருகிறது.
இதையும் படிங்க: அத்துமீறும் ஈரான்..!! எதிர்க்க நாங்க தயார்..!! பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் கூட்டறிக்கை..!!