கர்நாடக முதலமைச்சர் பதவியிலிருந்து சித்தராமையா விலகியுள்ள நிலையில் இன்று நடைபெறும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதலமைச்சராக டி.கே.சிவகுமார் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
2023ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் வென்று காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சராக பதவியேற்ற சித்தராமையா மூன்று ஆண்டுகள் பதவியில் நீடித்த நிலையில் டி.கே. சிவகுமாரின் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினர். இந்நிலையில் காங்கிரஸ் தலைமையின் அறிவுறுத்தலின் பெயரில் சித்தராமையா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
முன்னதாக பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் அமைச்சர்களுக்கு விருந்தளித்த சித்தராமையா ராஜினாமா முடிவை அறிவித்தார். இதனிடையில் சித்தராமையாவின் ராஜினாமாவை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் டி.கே. சிவகுமாரின் ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: சித்தராமையா Out..! முதல்வராகிறார் டி. கே. சிவக்குமார்..!! கர்நாடக அரசியலில் புதிய திருப்பம்..!
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா கட்சி தலைமை தன்னை மாநிலங்கள் அவைக்கு செல்ல கேட்டு கொண்டதாகவும், ஆனால் தான் அதனை ஏற்க மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார். தனக்கு தேசிய அரசியலில் விருப்பம் இல்லை என்றும் மாநில அரசியலில் தொடர போவதாகவும் அவர் கூறினார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற உள்ள கர்நாடக சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு டி.கே. சிவகுமாரை முதலமைச்சராக்கும் முடிவை காங்கிரஸ் தலைமை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் டி.கே. சிவகுமார் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அதை தொடர்ந்து நாளை அல்லது ஞாயிற்றுக்கிழமை டி.கே. சிவகுமார் தலைமையிலான அமைச்சர் அவையின் பதவி ஏற்பு விழா நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக முன்னாள் முதலமைச்சர்கள் ராமகிருஷ்ண ஹெக்டே மற்றும் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோரை பின்பற்றி சட்டப்பேரவை வளாகத்திலேயே பதவியேற்பு விழாவை நடத்த டி.கே.சிவகுமார் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கைமாறும் அதிகாரம்..!! பதவி விலகுகிறாரா சித்தராமையா..?? கர்நாடக அரசியலில் பரபரப்பு..!!