புதுடெல்லி: இந்தியாவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் டெல்லி வந்துள்ள நிலையில், அவரது பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்டுள்ள பிரத்யேக சொகுசு கார் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று டெல்லியில் நடைபெறும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஜின்பிங் பங்கேற்றுள்ளார். இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடியையும் அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது பிரத்யேக பாதுகாப்பு காரை வெளிநாட்டு பயணங்களுக்கும் பயன்படுத்துவது போல, ஜின்பிங்கும் தனது பாதுகாப்புக்காக சீனாவில் தயாரிக்கப்பட்ட Hongqi N701 என்ற லிமோசினை பயன்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்! மோடியுடன் இன்று முக்கிய சந்திப்பு!!
சீனாவின் பிரபலமான Hongqi அல்லது ‘ரெட் பேனர்’ பிராண்ட் தயாரிப்பான இந்த கார், சுமார் 5.5 மீட்டர் நீளம் கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு எகிப்து, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு ஜின்பிங் சென்றபோதும் இதே வகை வாகனம் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

N701 காரின் முக்கிய கவனம் அதன் பாதுகாப்பு அம்சங்கள்தான். 21 இன்ச் அளவிலான பாதுகாப்பு சக்கரங்கள், குண்டு தாக்குதலை எதிர்கொள்ளும் வகையிலான கண்ணாடி மற்றும் வலுவான வெளிப்புற பாதுகாப்பு அமைப்புகள் இதில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் வெடிகுண்டு தாக்குதல் மற்றும் ரசாயனத் தாக்குதல்களில் இருந்து பயணிகளை பாதுகாக்கும் வகையிலான தொழில்நுட்பங்கள் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரில் சுமார் 6.0 லிட்டர் V12 இன்ஜின், 408 ஹெச்பி வரை சக்தியை வழங்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இதனால் அமெரிக்க அதிபரின் புகழ்பெற்ற பாதுகாப்பு வாகனமான ‘தி பீஸ்ட்’ உடன் ஜின்பிங்கின் N701 காரும் ஒப்பிடப்படுகிறது. ஆனால் அமெரிக்க அதிபரின் காரில் இருப்பதாக வெளிப்படையாக கூறப்படும் சில அதிநவீன பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் N701-ல் உள்ளனவா என்பது முழுமையாக உறுதி செய்யப்படவில்லை.
இதனிடையே, ஜின்பிங்கின் பாதுகாப்பு கார் டெல்லி சாலைகளில் சென்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகின்றன.
இதையும் படிங்க: ஒரே மேடையில் மோடி, புதின், ஜி ஜின்பிங்! இந்தியாவில் ஒன்று கூடும் உலக தலைவர்கள்! பிரதமர் ட்வீட் வைரல்!