நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தன் மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்பம் நல நீதிமன்றத்தில் ரவி மோகன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரானபோது, பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சமரச தீர்வு மையத்திற்கு இந்த வழக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் அவர்களுக்குள் உடன்பாடு ஏற்படாததால், இந்த வழக்கு மீண்டும் குடும்ப நல நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே ரவிமோகனுக்கும், ஆர்த்திக்கும் இடையே அறிக்கை போர் நடைபெற்று வந்தது. இருவரும் மாறி மாறி குறை கொண்டே இருக்க, ரவி மோகனுக்கு ஆதரவாக பாடகி கெனிஷாவும், ஆர்த்திக்கு ஆதரவாக அவரது தாயார் சுஜாதாவும் குரல் கொடுத்தனர். ஆனாலும் இந்த விவகாரத்தில் யார் மீது தவறு உள்ளது என்பது தெள்ளத்தெளிவாக தெரியவில்லை.
இதையும் படிங்க: இனி 2 பேரும் எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

கடந்த 21ம் தேதி இவர்களது விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்த போது நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ஆகியோர் தனித்தனியாக கார்களில் வந்து நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது தனக்கு ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்பதற்காக விளக்கத்துடன் நடிகர் ரவிமோகன் மனு தாக்கல் செய்ய, ஆர்த்தி தரப்பில் தனக்கும், தனது இரு மகன்களுக்கும் ரவி மோகன் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவிற்கு பதிலளிக்கும்படி ரவி மோகனுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 12ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இதனையடுத்து தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க ஆர்த்தி மற்றும் அவரது தாய் சுஜாதாவிற்கு தடை விதிக்கக்கோரி நடிகர் ரவி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், தங்களுக்குக்கிடையேயான பிரச்சனை குறித்து ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் இனி எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது என உத்தரவிட்டார். மேலும் ஏற்கனவே வெளியிடப்பட்ட கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கவும் உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி இவர்கள் குறித்த செய்திகளை வெளியிடவும் விவாதிக்கவும் சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட இருவரும், அமைதியாக இருப்பதாக ஒப்புதல் அளித்தனர்.



இந்த நிலையில் ஆர்த்தி, ஊடகங்கள், மீடியா உள்ளிட்ட ஆன்லைன் பயனர்கள் யாராக இருந்தாலும் உயர்நீதி மன்றத்தின் உத்தரவின்படி, அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் நடந்து வரும் திருமண விவகாரம் தொடர்பாக எந்தவொரு செய்தியையும் வெளியிட்டிருந்தாலும் அதை உடனடியாக நீக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தொடர்ந்து அப்படி ஏதேனும் வெளியிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவித்துள்ளார். அதோடு நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: ரவிமோகனுக்கு சப்போர்ட் செய்த பாடகி சுசித்ரா..! கடுப்பில் ஆர்த்திரவியின் அப்பா செய்த செயல்..!