தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சுமார் 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரீனிவாசன். வில்லனிசத்தில் மிரட்டும் இவருக்கு பெயர் பெற்று கொடுத்தது என்னவோ திருப்பாச்சியில் சனியன் சகடை கதாபாத்திரமும், சாமியில் பெருமாள் பிச்சை என்ற கதாபாத்திரமும் தான். அந்த அளவிற்கு அவரது பேச்சு, மிரட்டும் ஸ்டைல் மக்கள் மனதில் நன்கு பதியவைத்தது.

அது தவிர தமிழில் கோ, சகுனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, சாமி 2 உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார் கோட்டா ஸ்ரீனிவாசன். இவர் 1978 ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் பிராணம் கரீது என்ற படத்தில் அறிமுக அறிமுகமானார். திரை பயணத்தில் வில்லன், துணை நடிகர் என 750 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள இவர், ஆந்திர அரசால் வழங்கப்படும் நந்தி விருதினை ஒன்பது முறை பெற்றுள்ளார். மேலும் திரையுலகில் கோட்டா ஸ்ரீனிவாசனின் பங்களிப்பிற்காக 2015 ஆம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. ஒரு நடிகராக மட்டுமில்லாமல் இந்தியன், நரசிம்மா, பாபா, சிவாஜி ஆகிய தமிழ் படங்களின் தெலுங்கு டப்பிற்கு குரல் கொடுத்துள்ளார். மேலும் இரண்டு படங்களில் பாடவும் செய்திருக்கிறார்.
இதையும் படிங்க: ஜெ. கையில் கலைமாமணி விருது.. நடிகர் பாண்டியராஜனின் பாட்டி மறைவு.. திரைப் பிரபலங்கள் இரங்கல்..!

இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு வீட்டில் ஓய்வு எடுத்து வந்த கோட்டா ஸ்ரீனிவாசன், ஜூலை 13-ஆம் தேதியான இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்திலேயே காலமானார். அவரது மறைவு திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் திரையுலகினர் பலர் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1942 ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி விஜயவாடாவில் உள்ள கண்கிபடு பகுதியில் பிறந்த கோட்டா ஸ்ரீனிவாசன், சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக வங்கி ஊழியராக பணியாற்றியதோடு, 1999 ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை விஜயவாடா கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக பணியாற்றியுள்ளார். தெலுங்கில் கடைசியாக 2023 சுவர்ண சுந்தரி படத்திலும், தமிழில் கடைசியாக காத்தா இ என்ற படத்திலும் கோட்டா ஸ்ரீனிவாசன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஹேக்கிங் லிஸ்டில் நடிகர் உன்னி முகுந்தன்.. பேஸ்புக்கில் அவரே போட்ட பதிவு..!