பிரபல நாட்டுப்புற பாடகி மற்றும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி அம்மாள், வயது மூப்பின் காரணமாக ஜூன் 14 ஆம் தேதி (இன்று) காலமானார். அவருக்கு வயது 99. சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியைச் சேர்ந்த இவர், தமிழ் நாட்டுப்புற இசையின் முன்னோடிகளில் ஒருவராகக் திகழ்ந்தார். மேலும் ஆல் இந்தியா ரேடியோவில் சுமார் 30 ஆண்டுகள் பணியாற்றிய இவர், சிறிய வயது முதல் வயல் வேலைக்குச் செல்வது முதல் அனைத்திலும் பாடல் பாடி அசத்தியவர். கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மண்ணிசைப் பாடல்களைப் பாடியுள்ளார் கொல்லங்குடி கருப்பாயி.

நாட்டுப்புற பாடகியாக மட்டுமில்லாமல், தமிழ் சினிமாவிலும் தனது நடிப்பை அசத்தலாக வெளிப்படுத்தியிருப்பார். பாண்டியராஜன் நடிப்பில் வெளியான 'ஆண் பாவம்' படத்தில் விகே ராமசாமிக்கு அம்மாவாக, பாண்டியராஜனுக்கு பாட்டியாக நடித்துள்ளார் கொல்லங்குடி கருப்பாயி. இவரை ஆண் பாவம் படத்தின் மூலம் பாண்டியராஜன் தான் அறிமுகப்படுத்தினார். மேலும் இவர் ஆயிசு நூறு, கோபால கோபாலா உள்ளிட்ட திரைப்படங்களில் பாட்டி வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர். 1993-ல் இவரது கலைச் சேவையை பாராட்டி முதல்வர் ஜெயலலிதா கலைமாமணி விருது வழங்கினார்.
இதையும் படிங்க: பிரபல தமிழ் நடிகர் ராஜேஷ் காலமானார்..! அதிர்ச்சியில் திரையுலகம்..!

தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்தாலும், மேடைகளில் பாடி வந்தார். ஆனால், காலப்போக்கில் அந்த வாய்ப்பும் மங்க, வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வந்தார். சில ஆண்டுகள் முன், இடிந்து விழும் நிலையில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையில், அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்குக் கூட சிரமப்படுவதாகத் தெரிவித்து, பாடகி கருப்பாயி கொடுத்த பேட்டி பேசுபொருளானது. அதன் பின், இந்த விஷயத்தை அறிந்த நடிகர் விஷால் அவருக்கு உதவினார். மேலும், விஷால் உதவியால் பாடகி கருப்பாயி நடிகர் சங்கத்திலும் உறுப்பினரானார்.

தனது கணவர் மற்றும் மகளின் மறைவுக்குப் பின் திரைத்துறையில் இருந்து விலகி, பின்னர் வறுமையில் வாழ்ந்து வந்த இவர் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஸ்கூல் முடிச்சாச்சு.. பட்டம் வாங்கிய மகள்.. குஷியில் சூர்யா - ஜோதிகா குடும்பம்..!