இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த வாரம் சனிக்கிழமை நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமார் பங்கேற்றார். இந்த விழாவில் கமல்ஹாசன் பேசிகையில், தமிழில் இருந்து பிறந்ததுதான் உங்கள் கன்னடம் பிறந்தது என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. கன்னடம் தமிழில் இருந்து பிறக்கவில்லை. அது தனித்து இயங்க கூடியது என்று கன்னட அமைப்பினர், கர்நாடகா அரசியல்வாதிகள் கூறினர். மேலும் கமல்ஹாசன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்தனர்.

கமல்ஹாசன் மன்னிப்பு கோரவில்லை. இதனால் தக்லைப் படத்தை கர்நாடகாவில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் பாதுகாப்புடன் படத்தை கர்நாடகாவில் வெளியிட வேண்டும் என்று கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தெரிவித்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்டால் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் எனக்கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. இதனால் வரும் 5ம் தேதி கர்நாடகாவில் தக்லைஃப் திரைப்படத்தை வெளியிட முடியாத நிலை உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீதிமன்றத்திற்கு போனாலும் விட மாட்டோம்... கமலுக்கு எதிராக போர் கொடி தூக்கிய கர்நாடக திரைப்பட வர்த்தக சபை!!

இதனிடையே கமல்ஹாசனுக்கு கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை. இதனால் அவர் திமுகவுடன் கைகோர்த்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகம் திராவிட மற்றும் தமிழ் மொழி கருத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. கன்னட மொழி தமிழ் மொழியில் இருந்து தான் வந்தது என்று கமல்ஹாசன் பேசியிருப்பதன் பின்னணியில் அரசியல் கணக்குகள் இருக்கிறதா? என்பது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பதிவில், தமிழ்நாடு வாழ்க என்று எழுதியுள்ளார். தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் பதிவு செய்துள்ளார். அதில் தமிழ்நாடு வாழ்க என்று பெரிய எழுத்துகளிலும் மற்ற 4 மொழிகளிலும் சின்ன எழுத்துகளிலும் எழுதியுள்ளார். மேலும் அதனை அவர் எக்ஸ் பக்கத்தின் முகப்பில் (கவர்) போட்டாவாக மாற்றியுள்ளார். இந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது. கன்னடம் - தமிழ் மொழி சர்ச்சைகளுக்கிடையே கமல்ஹாசனின் இந்த பதிவு மீண்டும் விவாதத்தை கிளப்பி உள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் மணிரத்தினம் - STR காம்போ..! அடுத்த அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்..!