தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வரும் ஒரு முக்கியமான போக்கு என்றால் அது ‘ரீ-ரிலீஸ்’ கலாச்சாரம். ஒருகாலத்தில் வெற்றிகரமாக ஓடிய படங்களை, இன்றைய தொழில்நுட்ப வசதிகளுடன் டிஜிட்டல் முறையில் புதுப்பித்து மீண்டும் திரையரங்குகளில் வெளியிடும் இந்த நடைமுறை, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக 90கள் மற்றும் 2000களில் வெளியான படங்கள், அந்த காலத்தின் நினைவுகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில் திரும்பி வருவது, பழைய ரசிகர்களுக்கு ஒரு நெகிழ்ச்சியான அனுபவமாகவும், புதிய தலைமுறைக்கு ஒரு புதிய பார்வையாகவும் அமைந்துள்ளது.
இந்த ரீ-ரிலீஸ் அலைவில் ஏற்கனவே பல முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்குகளை மீண்டும் கலக்கியுள்ளன. பாட்ஷா, பாபா போன்ற ரஜினிகாந்த் நடித்த படங்கள், நாயகன், வேட்டையாடு விளையாடு, ஆளவந்தான் போன்ற கமல்ஹாசன் நடித்த படங்கள், கேப்டன் பிரபாகரன் மூலம் விஜயகாந்த் ரசிகர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு அழைத்துச் சென்றன.

அதேபோல் விஜய் நடித்த கில்லி, சச்சின் போன்ற படங்கள், சூர்யா நடித்த வாரணம் ஆயிரம், தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி மற்றும் சேரன் இயக்கிய ஆட்டோகிராஃப் போன்ற படங்களும் ரசிகர்களிடையே மறுபடியும் பெரும் வரவேற்பைப் பெற்றன. இவை அனைத்தும் ரீ-ரிலீஸ் படங்களுக்கும் தனியான வர்த்தக மதிப்பு இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: 21 ஆண்டுகளுக்கு பிறகு.. ‘சிவகாசி’ திரைப்படம் ரீ-ரிலீஸ்..!! விஜய்.. அசின்.. நயன்தாரா ரசிகர்கள் உற்சாகம்..!
இந்த நிலையில் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் படம் அமர்க்களம். அஜித் குமார் நடித்த இந்த படம், அவரது திரைப்பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. 1993ஆம் ஆண்டு அமராவதி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அஜித், பின்னர் ஆசை, காதல் கோட்டை, வாலி போன்ற படங்கள் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அந்த வரிசையில் ‘அமர்க்களம்’ படம் அவரது நடிப்புத் திறனையும், மாஸ் ஹீரோ இமேஜையும் மேலும் உயர்த்திய படமாக அமைந்தது.
சரண் இயக்கத்தில் வெளியான இந்த படம், ஆக்ஷன் மற்றும் காதல் அம்சங்களை இணைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இதில் ஷாலினி அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து, பின்னர் அது திருமணமாக மாறியது என்பது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம். அதனால் ‘அமர்க்களம்’ படம், அஜித்தின் திரைப்பயணத்திலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் ரகுவரன், ராதிகா, நாசர், அம்பிகா, வினு சக்ரவர்த்தி, சார்லி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்கள் அனைவரின் நடிப்பும் படத்தின் வெற்றிக்கு வலுசேர்த்தது.
இப்போது, அஜித் – ஷாலினி தம்பதியின் திருமண நாளை முன்னிட்டு ‘அமர்க்களம்’ படம் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலையில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
திரையரங்குகளிலும் இந்த படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்கள் இந்த ரீ-ரிலீஸை ஒரு திருவிழாவாக கொண்டாட தயாராக உள்ளனர். பழைய நினைவுகளை மீண்டும் அனுபவிக்க ரசிகர்கள் திரையரங்குகளுக்கு திரளவுள்ளதாக கூறப்படுகிறது.

மொத்தத்தில், ‘அமர்க்களம்’ படத்தின் மறுவெளியீடு, ரீ-ரிலீஸ் கலாச்சாரத்தை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இது போன்ற முயற்சிகள், தமிழ் சினிமாவின் பொற்கால படைப்புகளை புதிய தலைமுறைக்கும் கொண்டு செல்லும் பாலமாக அமைகின்றன.
இதையும் படிங்க: உங்க அரசியல் ஆதாயத்துக்காக அஜித்தை இழுக்காதீங்க..! அவர் யாருக்கும் சப்போர்ட் பண்ணல - AK மேலாளர் ஆதங்கம்..!