தமிழகம் மட்டுமல்லாது நாட்டையே உலுக்கி எடுத்த சம்பவம் என்றால் அதுதான் பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம். "அண்ணா அடிக்காதீங்க அண்ணா வலிக்குது அண்ணா என பெண்கள் கதறிய குரல் இன்றும் பலரது நெஞ்சை பதற வைப்பதாகவே உள்ளது. ஒன்பது காட்டு மிராண்டிகளின் கைகளில் சிக்கிய பெண்களின் கதறல் காட்சி தமிழக மக்களின் மனதில் ரணமாக மாறி அவர்களுக்கு எப்பொழுது தண்டனை கொடுப்பீர்கள் என்ற குரல் நாடெங்கும் ஒலிக்க துவங்கியது. தற்பொழுது ஆட்சியில் உள்ள மு.கருணாநிதி ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதே இந்த குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்பேன் என்றதால் தான்.

2019ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக அந்த ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி இந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்தார். பின்பு மார்ச் மாதம் கடைசியில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி வசமானது. இதனை அடுத்து கைது செய்யப்பட்ட ஒன்பது பேரிடம் இருந்த செல்போன் மற்றும் லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதில் உள்ள விடியோக்களை வைத்து மின்னணு ஆதாரங்கள் தயார் செய்யப்பட்டன. பின்பு இவர்களால் பாதிக்கப்பட்ட 20 பெண்களிடம் சி.பி.சி.ஐ.டி நடத்திய விசாரணையில் சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன், அருளானந்தம், ஹெரன்பால், பாபு, அருண்குமார் ஆகியோர் குற்றவாளிகள் என தெரியவர, அனைவர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: பொள்ளாச்சி கேஸை முடிச்சிட்டீங்க.. அண்ணா பல்கலை. கேஸை விட்டுடாதீங்க..! கருத்தை பதிவு செய்த விஜே சித்து..!

இதனை தொடர்ந்து, கடந்த 2019ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 9 போரையும் இன்று அதிகாலை சேலம் சிறையில் இருந்து கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் காவல் துறையினர். பின்னர் இன்று மதியம் 12 மணியளவில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை, ஒரே பெண்ணுக்கு மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை தருவது என பல முக்கிய குற்றச்சாட்டுகள் இந்த வழக்கில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து 9 பேரும் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்ட பின்னர் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாக குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

அதில், குற்றவாளிகளான 9 பேரும் இளம் வயதினர். மேலும், திருமணமாகாதவர்கள்.. அவர்களுடைய எதிர்காலத்தையும், வயதான அவர்களது பெற்றோர்களையும் கவனித்துக் கொள்ள வேண்டிய காரணங்களை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்கக் குற்றவாளிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நீதிபதி நந்தினி தேவி அதனை மறுத்து,முதல் குற்றவாளியான சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனைகள், இரண்டாம் குற்றவாளி திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனைகள், மூன்றாம் குற்றவாளி சதீஷுக்கு 3 ஆயுள் தண்டனைகள், நான்காம் குற்றவாளி வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனைகள், ஐந்தாம் குற்றவாளி மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனைகள், ஆறாம் குற்றவாளி பாபுவுக்கு ஒரு ஆயுள் தண்டனை, ஏழாம் குற்றவாளி ஹெரன்பாலுக்கு 3 ஆயுள் தண்டனைகள், எட்டாம் குற்றவாளி அருளானந்தத்துக்கு ஒரு ஆயுள் தண்டனை, ஒன்பதாம் குற்றவாளி அருண்குமாருக்கு ஒரு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ. 85 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்புக்கு திரைபிரபலங்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதுவரை நடிகர் விஜய், கஸ்தூரி, விஜே சித்து உள்ளிட்டோர் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வந்த நிலையில், அவர்களை தொடர்ந்து நடிகை குஷ்பூவும் தனது கருத்துக்களை எக்ஸ் தளவாயிலாக தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், "நீதித்துறையின் மீதான நமது நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாகவும் அநீதி இழைக்கப்பட்ட பெண்களின் ஒழுக்கத்தை உயர்த்தும் வகையான சரியான தீர்ப்பு. இத்தகைய ஒழுக்கக்கேடான மனிதர்கள் மரணம் வரை சிறையில் இருக்கத் தகுதியானவர்கள். இவர்கள் வெளியில் இருப்பது சமூகத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் மற்றும் மனிதகுலத்திற்கும் இவர்கள் ஒரு கறை. இந்த தீர்ப்புக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: குஷ்பூவை சீண்டிப்பார்க்கும் ஹேக்கர்ஸ்..! கடுப்பில் கொந்தளித்த சுந்தர் சியின் மனைவி..!