தமிழ் திரைப்பட உலகில் “மாஸ்டர் ஸ்டோரி டெல்லர்” என அழைக்கப்படும் இயக்குநர் மணிரத்னம், தனது தனித்துவமான கதை சொல்லும் பாணி, அழகான காட்சியமைப்பு, மற்றும் கதாபாத்திரங்களின் ஆழமான உளவியல் வெளிப்பாட்டுக்காக பிரபலமானவர். “நாயகன்”, “ரோஜா”, “தளபதி”, “கன்னத்தில் முத்தமிட்டால்”, “ஓகே கன்மணி” போன்ற படங்கள் வரை அவரது படைப்புகள் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தியவை. அவரின் சமீபத்திய பிரமாண்ட படைப்பாக “பொன்னியின் செல்வன்” இரண்டு பாகங்களாக வெளியானது.
தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரிய காவியமான கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” நூலைத் திரைக்கு கொண்டு வந்தது என்பது மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு. அவர் இதனை 1990களிலிருந்தே முயற்சி செய்து வந்தார், ஆனால் பல காரணங்களால் அந்த கனவு தாமதமடைந்தது. இருப்பினும், அவர் தனது கனவை 2022-2023-ம் ஆண்டுகளில் நிஜமாக்கினார். “பொன்னியின் செல்வன் – 1” மற்றும் “பொன்னியின் செல்வன் – 2” ஆகிய இரு பாகங்களும் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. விமர்சகர்கள் சில குறைகளைச் சுட்டிக்காட்டினாலும், படம் வசூலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால், மணிரத்னம் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறிய ஒரு கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் பேச்சு பொருளாகியுள்ளது. அதில் அவர் “பாகுபலி இல்லையென்றால், பொன்னியின் செல்வன் இருந்திருக்காது” என்று கூறியுள்ளார்.
அந்த உரையாடலில் மணிரத்னம் பேசுகையில், “பாகுபலி திரைப்படம் இல்லையென்றால், பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் ஒருபோதும் உருவாகியிருக்காது. ராஜமவுலி அந்தப் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்தார். அதுவே எனக்கு மிகப் பெரிய ஊக்கமாக இருந்தது. ‘பெரிய வரலாற்று கதை, பெரிய கதாபாத்திரங்கள், பிரமாண்டமான காட்சிகள் என இவையெல்லாம் இன்றைய பார்வையாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படலாம்’ என்பதை பாகுபலி நிரூபித்தது. அது எனக்கு நம்பிக்கையை அளித்தது,” என்றார். மேலும், அவர் சிரித்தபடி, “நான் ராஜமவுலியை சந்தித்தபோது, இதையே அவரிடம் சொன்னேன். பாகுபலி இல்லையென்றால் நான் பொன்னியின் செல்வனை எடுக்க மாட்டேன் என்றேன். அவர் அதை கேட்டு சிரித்தார்” என்று கூறியுள்ளார். மணிரத்னத்தின் இந்த நேர்மையான வாக்குமூலம், அவரது தாழ்மையும், மற்ற இயக்குநர்களின் சாதனைகளை மதிக்கும் மனப்பான்மையையும் வெளிப்படுத்துகிறது.
இதையும் படிங்க: என்ன இப்படி ஆகி போச்சி..! ரஜினியின் ஜெயிலர்-2 படத்தில் நடிக்க மாட்டேன் என்ற ஸ்டார் நடிகர்.. ஷாக்கிங் அப்டேட்..!

அதுவே சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே பெரும் விவாதமாக மாறியுள்ளது. பலரும், “பெரிய இயக்குநர் என்றாலும், மற்றொரு இயக்குநரின் உழைப்பை மதிப்பது மணிரத்னத்தின் சிறப்பை காட்டுகிறது” என பாராட்டி வருகின்றனர். சிலர், “பாகுபலி இந்திய சினிமாவை மாற்றிய படம் என்பதில் மணிரத்னத்தின் கூற்று உண்மையே” என கருத்து தெரிவிக்கின்றனர். “பாகுபலி” – ராஜமவுலியின் இரண்டு பாகங்களாக வெளிவந்த இந்த எப்பிக் படம் இந்திய சினிமாவின் வரலாற்றையே மாற்றியது. அதன் காட்சியமைப்பு, பிரமாண்டம், கதையின் அடர்த்தி என அனைத்தும் பாகுபலியை உலகளவில் இந்திய சினிமாவை பிரதிநிதித்துவப்படுத்தும் படமாக்கியது. அதுவே, இந்தியாவில் பெரிய வரலாற்று படங்களுக்கு சந்தை இருக்கிறது என்பதை நிரூபித்தது. அந்த நம்பிக்கையே மணிரத்னத்துக்கும் “பொன்னியின் செல்வன்” உருவாக்குவதற்கான தைரியத்தை அளித்ததாக அவர் கூறியுள்ளார். அவரின் பேச்சில் ஒரு பக்கம் தன்னம்பிக்கையும், மறுபக்கம் மற்றவரின் வெற்றியை அங்கீகரிக்கும் பணிவும் வெளிப்பட்டது. மணிரத்னம்
மேலும் பேசுகையில், “நான் பொன்னியின் செல்வனை படமாக்க முயன்ற காலத்தில் தயாரிப்பாளர்கள் பலரும் பயந்து விலகிவிட்டார்கள். அத்தனை பெரிய கதை, இத்தனை கதாபாத்திரங்கள், பல இடங்கள் இது இன்று சாத்தியமா என்று யாரும் நம்பவில்லை. ஆனால் பாகுபலி வந்த பிறகு அந்த நம்பிக்கை அனைவரிடமும் மீண்டது. அப்போது தான் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த அர்த்தத்தில் ராஜமவுலிக்கும், பாகுபலிக்கும் நான் நன்றி சொல்ல வேண்டியிருக்கிறது. “பொன்னியின் செல்வன்” இரண்டு பாகங்களிலும் ரஜா ராஜ சோழன் காலத்தின் பெருமையை அழகாக திரையில் மீட்டுக் காட்டியிருந்தது. விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, திரிஷா, பிரகாஷ் ராஜ், சரத் குமார் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். படம் வசூலில் 900 கோடிக்கும் மேல் சம்பாதித்து மணிரத்னத்திற்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. இந்நிலையில், மணிரத்னம் கூறிய “பாகுபலி இல்லையென்றால் பொன்னியின் செல்வன் இல்லை” என்ற கூற்று, தமிழ்-தெலுங்கு சினிமா இணைப்பை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. இது தென்னிந்திய சினிமா எவ்வளவு ஒன்றிணைந்து வளர்ந்து வருகிறது என்பதற்கும் சான்றாகும்.
அதே சமயம், சில ரசிகர்கள் “மணிரத்னம் ஏற்கனவே 1990களில் இந்த கதைப்பகுதியை திட்டமிட்டவர். அதனால் பாகுபலி இல்லாமலே அவர் எடுத்திருப்பார்” எனும் கருத்தையும் பகிர்ந்துள்ளனர். ஆனால் இயக்குநர் தானே அந்த ஊக்கத்தைக் கூறியிருப்பதால், அது ஒரு உண்மையான பாராட்டாகவே பார்க்கப்படுகிறது. இன்றைய தமிழ் சினிமாவில் மணிரத்னம் அளவிலான இயக்குநர்கள் மிகவும் சிலர் தான் உள்ளனர். அவர் எப்போதும் கதையில் புதுமையைத் தேடுபவர். சில நேரங்களில் படங்கள் வசூலில் எதிர்பார்ப்பை அடையாவிட்டாலும், கலைமிகு பார்வையில் அவரது முயற்சிகள் என்றும் மதிக்கப்படுகின்றன. “தக் லைப்” படம் சமீபத்தில் வெளியானது. அந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை. ஆனால் மணிரத்னம் அதில் பெற்ற அனுபவத்தை அடுத்த படங்களில் பயன்படுத்தப் போவதாக கூறியுள்ளார்.

அவர் தற்போது புதிய கதை ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறார் என்றும், அது முழுக்க ஒரு புதிய வகை படமாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில், மணிரத்னம் கூறிய “பாகுபலி இல்லையென்றால் பொன்னியின் செல்வன் இருக்காது” என்ற கருத்து, ஒரு இயக்குநர் மற்றொரு இயக்குநரிடம் காட்டும் மரியாதையின் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இது அவரது சினிமா பார்வையையும், நியாயமான ஒப்புதலையும் வெளிப்படுத்துகிறது.
இதையும் படிங்க: மாகாபா-வின் வாழ்க்கையை மாற்றிய காதல் மனைவி..! அன்று எடுத்த முடிவால் கிடைத்த வாழ்க்கை.. ஆங்கர் ஓபன் டாக்..!