இயக்குநர் பாக்யராஜ் இறுதிச்சடங்கு குறித்து நடிகர் பார்த்திபன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: காலை 9 மணிக்கு இங்கிருந்து கிளம்புகிறோம். காலை 10.45 மணி முதல் 11.45 மணிக்குள் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாக்யராஜ் சாரின் திரைப்பயணத்தில் அவர் நிகழ்த்திய புரட்சி மிகப்பெரிய விஷயம். அதற்கு மரியாதை செலுத்தும் வகையில், அவருக்கு அரசு மரியாதை வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வருக்கு எங்களின் கோடானுகோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தனிப்பட்ட முறையில் சொல்ல வேண்டுமென்றால், என்னுடைய வாழ்க்கை முதன்முதலில் இங்கிருந்துதான் ஆரம்பித்தது. நான் பலமுறை கூறியிருக்கிறேன். உதவி இயக்குநராக சேர்ந்த புதிதில், இதே வாசலில்தான் நின்று கொண்டிருப்பேன்.
இதையும் படிங்க: உடல் மறையலாம்.. ஆனால் பார்வை மறையாது..!! கண் தானம் செய்து உலகிற்கு ஒளியாக மாறிய கே.பாக்கியராஜ்..!
பாக்யராஜ் சாரின் பிறந்தநாள் வந்தால், வள்ளுவர் கோட்டம் வரை ரசிகர்கள் கூட்டம் நிறைந்திருக்கும். அந்த கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, அவருக்கு வரும் மாலைகள் மற்றும் மரியாதைகளை வாங்கி அடுக்கி வைத்து, வரிசையை சரிசெய்து அனுப்புவதுதான் நான் உதவி இயக்குநராக சேர்ந்தவுடன் செய்த முதல் வேலை.
இன்றும் அதே வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். அதை நினைக்கும் போது அந்த பழைய நினைவுகள்தான் மனதில் வருகின்றன. அப்போது அந்த இடத்திற்கு வேறு யாரும் வரக்கூடாது என்று நினைத்தேன். நான் மெதுவாக வளர்ந்து வந்தாலும், இப்போதும் முதலமைச்சர் வந்து எனக்கு ஆறுதல் கூறியபோது, "என்னால் இதைத் தாங்க முடியவில்லை; எனக்கு எல்லாமே அவர்தான் சார்" என்று சொன்னேன்.
அதற்கு அவர், "எனக்குத் தெரியும்... அவருக்கும் நீங்கள்தான் அப்படித்தானே," என்று கூறினார். அப்படிப்பட்ட உறவு எங்களுக்குள் இருந்தாலும், அவருக்கு பணிவிடை செய்யும் உதவியாளர் என்ற அந்த பங்கு மட்டும் வேறு யாரிடமும் போய்விடக் கூடாது என்பதுதான் என் ஆசை.
நான் இயக்குநராகி வெளியே சென்றிருந்தால், அவருடைய பிறந்தநாளில் வரும் மாலைகளையும் மரியாதைகளையும் வேறு யாரோ வாங்கி வைப்பார்கள். அது எனக்கு ஏற்றதாக இருக்கவில்லை.
நான் இயக்குநராக ஆகவில்லை என்றாலும் பரவாயில்லை; கடைசி வரை அவருக்கு உதவியாளராகவே இருக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. ஆனால் அது முடியவில்லை.
எப்படியோ நான் உதவி இயக்குநராக ஆனதே, ஒரு நாள் இயக்குநராக வேண்டும் என்ற கனவிற்காகத்தான். நான் இயக்குநரான பிறகும், என்னைப் பற்றி முதன்முதலில் நம்பிக்கையுடன் பேசியவர் அவர்தான்.
"எப்படி பாரதிராஜாவிடம் இருந்து ஒரு பாக்யராஜ் வந்தாரோ, அதுபோல பாக்யராஜிடம் இருந்து ஒரு பார்த்திபன் வரப்போகிறார்" என்று நான் படம் இயக்குவதற்கு முன்பே கணித்தவர் அவர்தான்.
அந்த வகையில் குரு-சிஷ்யன் உறவுக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக அவர் இருந்தார். இந்த தலைமுறைக்குப் பிறகு, இப்படிப்பட்ட மரியாதையுடனும் பாசத்துடனும் இருக்கும் குரு-சிஷ்யன் உறவு மீண்டும் உருவாகுமா என்பது எனக்குத் தெரியவில்லை.
அவருக்கு எப்படி பாரதிராஜா இயக்குநரோ, அதேபோல எனக்கு என் இயக்குநர் பாக்யராஜ்தான்.
பாரதிராஜா அவர்கள் மறைந்த சில நாட்களிலேயே, இப்போது பாக்யராஜ் அவர்களின் மறைவும் தாங்க முடியாத துயரத்தை அளிக்கிறது.
இனிமேலும் நான் நிறைய சாதித்து, அந்த சாதனைகள் அனைத்தையும் அவருக்கான காணிக்கையாக அர்ப்பணிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதுவே அவருக்கு நான் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
இதையும் படிங்க: ஒரே மாதத்தில் இரண்டு ராஜாக்கள்..!! தமிழ் சினிமாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு.. பாக்கியராஜ் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்..!