திருப்பதி திருமலையில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் உச்சகட்ட நிகழ்வான தங்கக் கருட வாகன சேவை நாளை (செப்டம்பர் 19) மாலை 6.30 மணி முதல் நள்ளிரவு வரை நடைபெற உள்ளது. இந்தப் புனித உற்சவத்தைக் காண நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழாவின் நான்காம் நாளான இன்று (செப்டம்பர் 18) காலை கல்பவிருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்தார். பக்தர்கள் “கோவிந்தா… கோவிந்தா…” என்ற பக்தி முழக்கத்துடன் தரிசனம் செய்தனர். இன்று இரவு சர்வபூபால வாகன உற்சவம் நடைபெறும்.
நேற்று இரவு (மூன்றாம் நாள்) ஸ்ரீதேவி, பூதேவி உடன் ஏழுமலையான் நான்கு மாட வீதிகளிலும் புறப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கருட சேவை பிரம்மோற்சவத்தின் முதன்மையான நிகழ்வாகக் கருதப்படுகிறது. தங்கக் கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வருவார். இந்தக் காட்சியைக் காண காலை முதலே மாட வீதிகளில் பக்தர்கள் குவியத் தொடங்குவர்.
இதையும் படிங்க: கோவிந்தா!! கோவிந்தா!! திருப்பதியில் பிரம்மோற்சவ கொடியேற்றம்.. மகிழ்ச்சியில் திளைத்த பக்தர்கள்!!
ஆந்திரப் பிரதேச போக்குவரத்துத் துறை சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழகத்திலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக மாட வீதி நுழைவு வாயில்களில் சிறப்பு வழிகாட்டிப் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பல மடங்கு போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இருசக்கர வாகனங்களுக்கு மலைப்பாதையில் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியார் வாகனங்களைத் தவிர்த்து அரசுப் பேருந்துகள் மற்றும் தேவஸ்தான வாகனங்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று 15 மணி நேரத்தில் 68,265 பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்களில் 26,959 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.
உண்டியலில் ரூ.4.16 கோடி வசூலானது. 3.21 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது. இலவச தரிசனத்திற்காக பலர் 15 மணி நேரம் காத்திருந்தனர். திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளன. கருட சேவையின் போது திருமலை முழுவதும் பக்திப் பரவசம் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கோவிந்தா!! கோவிந்தா!! திருப்பதியில் பிரம்மோற்சவ கொடியேற்றம்.. மகிழ்ச்சியில் திளைத்த பக்தர்கள்!!