செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே 14 வயது பள்ளி மாணவியை இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து, உறவினர் உட்பட இருவரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கல்பாக்கத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 23ஆம் தேதி காலையில் இயற்கை உபாதைக்காக வயல்வெளிப் பகுதிக்குச் சென்ற சிறுமி நீண்ட நேரமாக வீடு திரும்பாததால், அவரது தந்தை தேடிச் சென்றார்.
உறவினர் வீட்டில் சிறுமி இருப்பதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். அப்போது மாடியிலிருந்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டதால் மேலே சென்று பார்த்தபோது, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், தலையில் பலத்த காயத்துடன் மயங்கிக் கிடந்த சிறுமியை மீட்டனர்.
இதையும் படிங்க: 23 பெண்களின் நிர்வாண விடியோ! திருவண்ணாமலை கும்பல் அரங்கேற்றிய கொடூரம்! விசாரணையில் பகீர்!
உடனடியாக சிறுமியை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மாமல்லபுரம் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமியின் உறவினரான 20 வயது மகேஸ்வரன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 27 வயது அஜய் ஆகிய இருவரும் சிறுமியை வாயில் துணியைத் திணித்து தூக்கிச் சென்று, வீட்டு மாடியில் பலாத்காரம் செய்ததாக தெரியவந்தது. தப்பிக்க முயன்ற சிறுமியின் தலையில் கட்டையால் தாக்கிய பின்னர் தலைமறைவாகியுள்ளனர்.

போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். கைதான மகேஸ்வரன் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். பெற்றோர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், விரைவில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்துள்ளனர். குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்தக் கொடூர சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா தவெக? இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை? விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!