கனடாவில் தெற்காசிய சமூகத்தை குறிவைத்து பணப்பறிப்பு மற்றும் மிரட்டல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கனடாவில் வாழும் இந்தியர்கள் மற்றும் தெற்காசிய சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள பீல் பிராந்தியத்தில் கடந்த சில மாதங்களாக உணவக உரிமையாளர்கள், லாரி போக்குவரத்து நிறுவன உரிமையாளர்கள் உள்ளிட்ட தெற்காசிய தொழிலதிபர்கள் மிரட்டப்பட்டு வந்ததாக புகார்கள் எழுந்தன. ஆயுதங்களை காட்டி அச்சுறுத்தி, பெரும் தொகை பணம் கேட்டு வந்ததாகவும் தகவல் வெளியானது.
இதையடுத்து, இந்த குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பீல் பிராந்திய போலீசார் சிறப்பு “பணப்பறிப்பு தடுப்பு பணிக்குழு” ஒன்றை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பல மாத கண்காணிப்பு மற்றும் ரகசிய தகவல் சேகரிப்புக்குப் பிறகு, குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட 17 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
இதையும் படிங்க: அச்சுறுத்தும் எபோலா..!! 21 நாட்கள் தனிமை கட்டாயம்..!! அதிரடி காட்டும் கனடா..!!

போலீசார் வெளியிட்ட தகவலின்படி, கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் “பார் பிரதர்ஸ்” என்ற சர்வதேச குற்றவியல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட அனைவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
அவர்களிடமிருந்து ஆறு துப்பாக்கிகள், போதைப்பொருட்கள், பல செல்போன்கள் மற்றும் போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த குழு நீண்ட காலமாக திட்டமிட்டு பணப்பறிப்பு மற்றும் மிரட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் கனடாவில் தெற்காசிய தொழிலதிபர்களிடையே பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்திய மற்றும் பஞ்சாபி சமூகத்தை குறிவைத்து குற்றச்செயல்கள் நடைபெறுவதாக ஏற்கனவே பல புகார்கள் எழுந்திருந்தன.
கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், மேலும் சிலருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். கனடாவில் இந்திய வம்சாவளியினர் தொடர்பான இந்த சம்பவம் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி! இங்கிலாந்தில் இளம் மேயர்! இந்திய வம்சாவளி இளைஞர் படைத்த சாதனை!