சென்னை: சென்னையில் பிறந்து இரண்டு நாட்களே ஆன பெண் குழந்தையை பெற்ற தாயே ரூ.9 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாய், குழந்தையை வாங்கிய தம்பதி, மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் மற்றும் புரோக்கர்கள் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மீட்கப்பட்ட குழந்தை, அரசின் குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த குள்ள கணேஷ் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்றும், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது மனைவி பவித்ரா, 25, வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் கருத்தரிப்பு மருத்துவமனையில் கடந்த 18ம் தேதி பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
கணவர் சிறையில் இருப்பதால் குடும்பத்தில் வறுமையான சூழல் நிலவியதாக கூறப்படுகிறது. மருத்துவமனை கட்டணத்தை செலுத்த முடியாமல் பவித்ரா தவித்ததை அறிந்த குழந்தை விற்பனை புரோக்கர்கள், குழந்தையை விற்றால் மருத்துவமனை செலவையும் சமாளிக்க முடியும் என்றும், கூடுதலாக பணம் கிடைக்கும் என்றும் ஆசை காட்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஒடிசா பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! சூட்கேஸில் உடல் பாகங்கள்! கூடுவாஞ்சேரி கொலையில் திடுக் திருப்பம்!
இதனை நம்பிய பவித்ரா, பிறந்து இரண்டு நாட்களே ஆன தனது பெண் குழந்தையை ரூ.9 லட்சத்துக்கு விற்பனை செய்ய சம்மதித்ததாக கூறப்படுகிறது. புரோக்கர்களான வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தனலட்சுமி மற்றும் வேளச்சேரியைச் சேர்ந்த ஆண்டாள் ஆகியோர் மூலம் மருத்துவமனை வரவேற்பாளர் துர்காவை அணுகியுள்ளனர்.
துர்காவின் உதவியுடன், ஆந்திராவில் தொழில் செய்து வரும் தஞ்சையைச் சேர்ந்த கணேசமூர்த்தி - செல்வரசி தம்பதியிடம் குழந்தை விற்பனை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, குள்ள கணேஷின் குற்றப் பின்னணி காரணமாக அவரது குடும்பத்தினரை போலீசார் கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது பவித்ராவுக்கு குழந்தை பிறந்திருந்த நிலையில், அவரது வீட்டில் குழந்தை இல்லாதது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விசாரணை நடத்திய வில்லிவாக்கம் போலீசார், பவித்ராவிடம் விசாரித்தபோது குழந்தையை புரோக்கர்கள் மூலம் விற்பனை செய்ததை அவர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. தொடர்ந்து புரோக்கர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தனிப்படை போலீசார் ஆந்திராவுக்கு சென்று குழந்தையை மீட்டு சென்னைக்கு அழைத்து வந்தனர்.
இந்த வழக்கில் குழந்தையை விற்றதாக கூறப்படும் பவித்ரா, குழந்தையை வாங்கிய கணேசமூர்த்தி - செல்வரசி தம்பதி, மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ராஜசேகர், நிர்வாக அலுவலர் விசாலாட்சி, டாக்டர் லலிதாம்பிகை, வரவேற்பாளர் துர்கா மற்றும் புரோக்கர்கள் ஆண்டாள், தனலட்சுமி உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு பவித்ராவை மட்டும் காவல் நிலைய ஜாமினில் போலீசார் விடுவித்ததாக கூறப்படுகிறது. மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை தற்போது அரசின் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 4,000 போலீசாருக்கு உதவிய திட்டம் திடீர் முடக்கம்! நிதி இல்லாமல் தவிக்கும் ‘மகிழ்ச்சி’