காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 1,400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் 103 தமிழர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட இந்தியர்களும் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், புதிய வெள்ள அபாய எச்சரிக்கையால் சில பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு பனிப்பாறை உருகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு, நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தை மிகக் கடுமையாக பாதித்தது. திடீரென பெருக்கெடுத்த வெள்ளத்தில் வீடுகள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன. பல பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
இதையும் படிங்க: நேபாள வெள்ளத்தில் சடலங்களை தேடி நகை திருடும் கொடூரம்! மனிதநேயம் மறந்த கும்பல்! அதிர்ச்சி சம்பவம்!
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ஹெலிகாப்டர்கள் மூலமாகவும், தரைவழியாகவும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை தமிழர்கள் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீட்கப்பட்ட 21 தமிழர்கள் நேபாள தலைநகர் காத்மாண்டுவை வந்தடைந்துள்ளனர். அவர்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காணாமல் போன இந்தியர்களை கண்டறிவதற்கான முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த பேரிடரால் சுமார் 93,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ரெட் கிராஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதற்காக சுமார் ரூ.300 கோடி தேவைப்படுவதாகவும் அந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, போதே கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து திபெத் எல்லைப் பகுதியில் உருவாகியுள்ள செயற்கை ஏரியில் உடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் மேலும் ஒரு பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அச்சம் உருவாகியுள்ளது.
புதிய அபாயத்தை கருத்தில் கொண்டு, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை சீனா தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், ரசுவா மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள நேபாள ராணுவமும், அப்பகுதியில் நடைபெற்று வந்த தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
ஏற்கனவே 469 உயிர்களை காவு வாங்கிய பேரிடரில் இருந்து மக்கள் மீள்வதற்குள் புதிய வெள்ள அபாய எச்சரிக்கை வெளியாகியிருப்பது நேபாள மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் எப்போது மீண்டும் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: மோடியை சந்திக்க இந்தியா வருகை? நேபாள பிரதமரின் முதல் வெளிநாட்டுப் பயணம் குறித்து முக்கிய தகவல்!