சென்னை பாரிமுனையில் இருந்து ரூ.11 லட்சம் பணத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை வழிமறித்து, கத்தியை காட்டி பணத்தை பறித்ததாக கூறப்படும் சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பணம் எங்கிருந்து வந்தது, அந்த தொகை குறித்து குற்றவாளிகளுக்கு தகவல் கொடுத்தது யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்றத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன், தனது செலவுக்காக தெரிந்த நபர் ஒருவரிடம் இருந்து ரூ.11 லட்சம் பணத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் இருசக்கர வாகனத்தில் பாரிமுனையில் இருந்து புறப்பட்ட அவர், தியாகராய நகர் வாணி மகால் எதிரே உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து வந்ததாக கூறப்படும் 4 பேர் கொண்ட கும்பல், கார்த்திகேயனை வழிமறித்துள்ளது. கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த ரூ.11 லட்சம் பணத்தை பறித்துக்கொண்டு அந்த கும்பல் தப்பிச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: 10 வயதில் எடுத்த சபதம்! 20 வயதில் நடந்த கொலை! ரீல்ஸால் வந்த பகை! தவெக நிர்வாகி கொலை வழக்கில் திடீர் திருப்பம்!
இதுகுறித்து கார்த்திகேயன் பாண்டிபஜார் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து தேனாம்பேட்டை உதவி ஆணையர் ஜமால் மற்றும் பாண்டிபஜார் குற்றப்பிரிவு ஆய்வாளர் நடராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வழிப்பறி கும்பல் பயன்படுத்தியதாக கூறப்படும் இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். இதன் மூலம் வேளச்சேரியில் பதுங்கியிருந்ததாக கூறப்படும் அருண்குமார், 37, என்பவர் முதலில் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆனந்த செல்வன், 32, சூளைமேட்டை சேர்ந்த பப்லு, 32, மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முகமது பாசில், 32, ஆகியோர் கூட்டாளிகளாக செயல்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.2.38 லட்சம் பணம், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனந்த செல்வன் மற்றும் பப்லு மீது ஏற்கனவே வழிப்பறி வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
4 பேரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, ரூ.11 லட்சம் பணத்துக்கான ஆவணங்கள் தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். பணம் தொடர்பான முழுமையான விவரங்கள் மற்றும் அந்த தொகை இருப்பது கும்பலுக்கு எவ்வாறு தெரிந்தது என்பதும் விசாரணையில் இடம்பெற்றுள்ளது.
இதையும் படிங்க: குற்றவாளிகள் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி தவெக! சென்னை கொலை! உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்!