டெல்லியில் பஸ்சில் தனியாக பயணம் செய்த 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பஸ் டிரைவர் மற்றும் உதவியாளரை போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி, 11-ம் வகுப்பு படித்து வருகிறார். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, நொய்டாவில் வசிக்கும் உறவினரை சந்திப்பதற்காக அவர் தனியாக புறப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி இரவு டெல்லி பகுதியில் கனமழை பெய்துகொண்டிருந்தபோது, அந்த சிறுமி பாரி சவுக் பகுதியில் தவறுதலாக இறங்கியதாக கூறப்படுகிறது. மழைக்கு நடுவே செல்ல இடமின்றி தவித்த அவர், அந்த வழியாக வந்த ஸ்லீப்பர் பஸ்சிடம் உதவி கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: 8 சிம் கார்டுகள்! ஐ.எஸ்.ஐ. உளவு வேலை? பாகிஸ்தானுக்கு தகவல் கசியவிட்ட இளம் தம்பதியை தூக்கிய டெல்லி போலீஸ்!
அந்த பஸ் பயணிகளை ஏற்றிச் செல்லாமல், பழுதுபார்ப்பதற்காக பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் பஸ்சுக்குள் வேறு பயணிகள் யாரும் இல்லை. சிறுமி பஸ்சில் ஏறிய பின்னர், டிரைவர் குல்தீப் மற்றும் உதவியாளர் சந்தீப் ஆகியோர் அவரிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இருவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர், சிறுமி ஏறிய இடத்தில் இருந்து சுமார் 47 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காஷ்மீர் கேட் பகுதியில் அவரை இறக்கிவிட்டு இருவரும் பஸ்சில் அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமி போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், திமார்பூர் பகுதியில் இருவரையும் கைது செய்தனர். சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் பஸ்சும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஸ்லீப்பர் பஸ்சின் ஜன்னல் மற்றும் கதவுகள் துணியால் மறைக்கப்பட்டிருந்ததாகவும், பஸ்சுக்குள் பயணிகள் இல்லாத சூழ்நிலையும் குற்றம் நடந்தபோது முக்கிய காரணிகளாக இருந்ததாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் சிறுமியின் பாதுகாப்பு மற்றும் அடையாளம் தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சம்பவம் தொடர்பான கூடுதல் ஆதாரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சுதந்திர தினம்: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு - 20,000 போலீசார் குவிப்பு; ட்ரோன் கண்காணிப்பு தீவிரம்!!