மேகாலயா மாநிலம், கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள சோரா பகுதி முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. சோரா என அழைக்கப்படும் சிரபுஞ்சி, உலகில் அதிகளவில் மழை பெய்யும் பகுதியாக உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் சிரபுஞ்சிக்கு ஆண்டு தோறும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி (29) மற்றும் சோனம் ரகுவன்ஷி (26) தம்பதியினர், மே 11ஆம் தேதி திருமணம் முடிந்து, மே 20ஆம் தேதி மேகாலயாவிற்கு தேனிலவுக்கு புறப்பட்டனர்.
ராஜா ரகுவன்ஷி, சோனம் தம்பதி இன்ஸ்டாகிராமில் பிரபலமான மேகாலயாவின் உயிருள்ள வேர் பாலங்களை (Living Root Bridges) பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டனர். இந்தோரில் ட்ரான்ஸ்போர்ட் தொழில் செய்யும் ராஜா, பயணத்தை கவனமாக திட்டமிட்டு, ஒவ்வொரு விவரத்தையும் ஆராய்ந்து தயாராக இருந்தார். சிரபுஞ்சிக்கு ஹனிமூன் சென்று அங்கு உற்சாகமாக சுற்றிப்பார்த்தனர். அங்கு ஒரு ஸ்கூட்டரை வாடகை எடுத்துக் கொண்டு சுற்றுலா தளங்களை பார்வையிட்டனர்.
இதையும் படிங்க: பழைய கட்டிடத்தின் மீது சாய்ந்து அரட்டை.. இடிந்து விழுந்த பால்கனி சுவர்.. ஒடிசா தொழிலாளர்கள் காயம்..!

மே 22 அன்று, இந்த தம்பதி மவுலாக்கியாட் கிராமத்துக்கு வந்து, 3,000 படிகள் இறங்கி நோங்ரியாட் கிராமத்தில் உள்ள ஒரு விருந்தினர் இல்லத்தில் (Homestay) தங்கினர். அடுத்த நாள், மே 23 காலையில், அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு, பின்னர் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அவர்களது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால், குடும்பத்தினர் கவலையடைந்து, மேகாலயாவுக்கு சென்று உள்ளூர் காவல்துறையுடன் இணைந்து தேடுதல் வேலையை தொடங்கினர்.
காவல்துறையினர், தம்பதி வாடகைக்கு எடுத்திருந்த ஆக்டிவா ஸ்கூட்டரை, ஷில்லாங் மற்றும் சோஹ்ரா (செர்ராபுஞ்சி) இடையே உள்ள ஒரு கஃபே அருகே கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடித்தனர். இது உள்ளூர் மக்களையும், காவல்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடனடியாக தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது.
ஸ்கூட்டரில் உள்ள ஜிபிஎஸ் கருவி, இவர்கள் வெய் சாவ்டோங் (Wei Sawdong) பகுதியை நோக்கி சென்றதாக காட்டியது.

11 நாட்கள் நடந்த தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, ஜூன் 2ஆம் தேதி, நோங்க்ரியாட் கிராமத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெய் சாடாங் நீர்வீழ்ச்சி அருகே, 100 அடி ஆழமான பள்ளத்தாக்கில் ராஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
உடலை அடையாளம் காண்பது கடினமாக இருந்தபோதிலும், ராஜாவின் கையில் பச்சைக் குத்தியிருந்த 'ராஜா' என்ற எழுத்தும், அவர் அணிந்திருந்த ஸ்மார்ட் வாட்சும் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தின. மேலும், உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் பெண் ஒருவரின் வெள்ளை நிற சட்டை, உடைத்துபோன செல்போன் கவர், மாத்திரைகளும் கிடந்தன.
கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேக் சியாம், ராஜாவின் மரணம் ஒரு கொலை என்று உறுதிப்படுத்தினார். அது ஒரு 'டாவோ' (பாரம்பரிய கத்தி). அது ஒரு புதிய டாவோ. இது இந்த குற்றத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது கொலை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று விவேக் சியாம் தெரிவித்தார். சம்பவ இடத்தில் இருந்து பெண்ணின் வெள்ளை சட்டை, உடைந்த அலைபேசி மீட்கப்பட்டுள்ளதால், ராஜாவை கொன்ற கும்பல் சோனத்தை கடத்திச் சென்றார்களா என போலீசார் விசாரித்தனர்.

புது மாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட சம்பவம் மேகாலயா அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. ரகுவன்ஷியின் மனைவி சோனம் என்ன ஆனார்? அவர் கடத்தப்பட்டாரா? என்பது குறித்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் மாயமான சோனம், மேலும் 3 நபர்களுடன் பிடிபட்டுள்ளார். அவர்கள் காசிப்பூர் காவல்நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட்டபோது, சோனமுடன் கைதான நபர்கள்தான், ரகுவன்சியை கொன்றார்கள் என்பதும், ரகுவன்ஷியை கொல்ல சோனம்தான் அவர்களை பணி அமர்த்தினார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமாகி ஒரு மாதத்திற்குள் ரகுவன்ஷியை கொல்ல சோனம் திட்டமிட்டது ஏன் என்று விசாரணை நடைபெற்று வருகிறது. ,மேலும் இந்த குற்றத்தில் தொடர்புடையதாக சந்தேகமுள்ள நபர்களையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சோனம் ரகுவன்ஷியின் தந்தை தேவி சிங் இதனை மறுத்துள்ளார். என் மகள் சோனம் அப்பாவி. என் மகள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவளால் இதைச் செய்ய முடியாது. அவள் கணவனை கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை. இரு குடும்பங்களின் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

மேகாலயா அரசு ஆரம்பத்திலிருந்தே பொய் சொல்லி வருகிறது. என் மகள் நேற்று இரவு காஜிப்பூரில் உள்ள ஒரு தாபாவிற்கு வந்தாள், அவள் தன் சகோதரனை அழைத்தாள்.
போலீசார் தாபாவிற்குச் சென்றனர், அங்கிருந்து அவள் அழைத்துச் செல்லப்பட்டாள். என் மகளிடம் என்னால் பேச முடியவில்லை. என் மகள் ஏன் இப்படி ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும். மேகாலயா போலீசார் பொய் சொல்கின்றனர். மேகாலயாவில் அவள் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கில் சி.பி.ஐ., விசாரணை கோரி, மத்தியப் பிரதேச முதல்வரை சந்தித்து முறையிடுவோம். மேகாலயா போலீசார் பொய்யான கதைகளை உருவாக்குகின்றனர் என கூறீனார்.
இதையும் படிங்க: அமித்ஷா தகுதியற்றவர்..! அருவருப்பு.. அப்பட்ட பொய்.. திமுக ராஜா கடும் தாக்கு..!