சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியை அடுத்துள்ள மண்மலை கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 78). ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ.வான இவர் 40 ஏக்கர் பரப்பளவில் உள்ள தனது தோட்ட பங்களாவில் மனைவி விஜயகுமாரியுடன் வசித்து வருகிறார். கடந்த 29ம் தேதி வேணுகோபால் கோவைக்கு சென்று விட்டார். இதனால் விஜயகுமாரி தனது மகள் காந்திமதி மற்றும் 5 வயது பேரன் அதிரூபனுடன் இருந்துள்ளார். அப்போது முகமூடி அணிந்து வந்த இருவர் சுவர் ஏறி வீட்டுக்குள் குதித்துள்ளனர்.
அவர்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விஜயகுமாரி யாரு நீங்கள்? என கேட்டுள்ளார். உடனே முகமூடி கொள்ளையர்கள் அவரது கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டியுள்ளனர். பின்னர் அங்கு வந்த காந்திமதி மற்றும் பேரன் அதிரூபன் ஆகிய மூவரையும் பிடித்து அறைக்குள் வாயைக் கட்டி அடைத்து வைத்துள்ளனர்.

அதே நேரத்தில் அங்கு மாடுகளுக்கு பால் கறக்க வந்த பால்காரரான சந்திரன் என்பவரையும் அரிவாளைக் காட்டி மிரட்டி அறையில் அடைத்து வைத்தனர். பின்னர் வீட்டில் இருந்த செல்போன்களை தீ வைத்து எரித்த கொள்ளையர்கள், சிசிடிவி கேமிரா காட்சிகள் பதிவாகும் ஹார்டு டிஸ்குகளை எடுத்துக் கொண்டு தப்பினர். பின்னர் வேணுகோபால் அறைக்குள் நுழைந்து பார்த்த விஜயக்குமாரி அதிர்ச்சியடைந்தார்.
பிரோவில் இருந்த 20 பவுன் நகை மற்றும் அவரது பெட்ரோல் பங்க்கில் வசூலான பணம் ஒரு லட்சம் ரூபாயையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்த தகவலையடுத்து தம்மம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் மூலம் கைரேகைகளை பதிவு செய்த போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடினர்.
இதையும் படிங்க: தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறதா போக்குவரத்து துறை? - அமைச்சர் சிவசங்கர் அதிரடி விளக்கம்!

இந்த நிலையில் திருப்பூரைச் சேர்ந்த கார் டிரைவர் ஆனந்த்குமார் (வயது 31) மற்றும் காரை அடமானமாகப் பெற்ற சுபாஷ்சந்திரபோஸ் (வயது 29) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் உள்ள குற்றவாளிகளை தேடிவந்த நிலையில், கோவையில் தனியார் டிடெக்டிவ் நிறுவனம் நடத்திய கோவை சிட்கோ பகுதியை சேர்ந்த விஜயகுமார் (43), சுந்தராபுரம் சந்தியா (25), உதவியாளர் தொண்டாபுத்தூர் ரவிச்சந்திரன் (48) நண்பரான தம்மம்பட்டி அருகே துறையூர் மாராடியைச் சேர்ந்த அஸ்வின்காந்த் (50) ஆகிய நான்கு பேரையும் கடந்த 4ம் தேதி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இவ்வழக்கில் மேலும் ஒரு முக்கிய குற்றவாளியான திருப்பூர் செளடாம்பிகா நகர் பகுதியை சேர்ந்த கிஷோர்குமார் [28] என்பவரை சேலம் –கோயமுத்தூர் மெயின்ரோடு அவினாசி தாண்டி என்.ஹெச்.தாபாவில் இருந்து வெளியே வரும் போது கைது செய்த போலீசார் விசாரணைக்காக மண்மலையில் உள்ள சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது அனைவரும் சேர்ந்து எப்படி கொள்ளயடித்தார்கள் என்பதை போலீசாரிடம் விளக்கி கொண்டிருக்கும் போது எதிர்பாரத விதமாக போலீசார் காவலில் இருந்து தப்பி சுவரில் ஏரி குதித்து தப்பியபோது கிஷோர்குமாரின் வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.

அவர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது, கோவையை சேர்ந்த பி. எஸ். சி. பட்டதாரியான சந்தியா, விஜயகுமார் இருவரும் ' சிவகர்ணா டிடெக்டிவ் ஏஜென்சி' நடத்தி வந்துள்ளனர். இவர்களுக்கு அஸ்வின்காந்த் பிளானிங் உள்ளிட்ட விவரங்களை தெரிவித்துள்ளார்.
இந்த கொள்ளை கும்பல் கருப்பு பணம் வைத்துள்ள வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை அடித்தால் யாரும் போலீசில் புகார் தரமாட்டார்கள். அதனால் தப்பித்து கொள்ளலாம் என்று திட்டமிட்டனர். 100. கோடி 200 கோடி என கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்க கூகுள் மீட்டிங் மூலம் திட்டம் தீட்டீ கொள்ளையடிக்க முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனர்.
இதையும் படிங்க: நீலகிரியில் வலுக்கும் எதிர்ப்பு; இரவோடு இரவாக ஓட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு..!