மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர் பதற்றத்திற்கு இடையே குவைத்தில் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரானுக்கு எதிராக நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் உயிரிழந்ததாக ஈரான் உறுதிப்படுத்தியது. இந்தத் தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் பலியானதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஈரான் தனது பதிலடியாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் இலக்குகளைத் தாக்கி வருகிறது. வளைகுடா பகுதியில் உள்ள பல நாடுகளின் இராணுவத் தளங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால், அப்பகுதியில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தச் சூழலில், குவைத் நாட்டில் நேற்றிரவு ஒரு முக்கிய சம்பவம் நிகழ்ந்தது. குவைத்தின் மின்சாரம், நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் ஒரு மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆலையின் சேவை கட்டிடம் ஒன்று ஈரானிய தாக்குதலுக்கு இலக்கானதாகத் தெரிவித்தது. இந்தத் தாக்குதலில் ஒரு இந்தியத் தொழிலாளர் உயிரிழந்தார். மேலும், ஆலையின் கட்டிடத்துக்கு கணிசமான பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குவைத்தில் பரபரப்பு! 3 அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன! விமானிகள் 6 பேர் உயிர் தப்பினர்!
அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஃபாத்திமா அப்பாஸ் ஜவ்ஹர் ஹயாத் வெளியிட்ட அறிக்கையில், “குவைத் அரசுக்கு எதிரான ஈரானின் ஆக்கிரமிப்பின் ஒரு பகுதியாக இந்த சேவை கட்டிடம் தாக்கப்பட்டது. இதில் இந்திய தேசியத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளர் உயிரிழந்தார். கட்டிடத்துக்கு கடுமையான பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தாக்குதல் நடைபெற்ற உடனேயே தொழில்நுட்பம் மற்றும் அவசரகால மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கின. அங்கீகரிக்கப்பட்ட அவசரத் திட்டத்தின்படி ஆலையின் செயல்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குவைத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய துறைகளுடன் முழு ஒத்துழைப்புடன் பாதிக்கப்பட்ட பகுதியைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அமைச்சகம் பொதுமக்களுக்கு அமைதியாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. நிலைமை சீரடைந்தவுடன் முழு விவரங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளது. வளைகுடா நாடுகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மீது ஈரான் நடத்தும் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், பிராந்திய அளவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. குவைத் அரசு இந்தச் சம்பவத்தை “கடுமையான ஆக்கிரமிப்பு” என்று விமர்சித்துள்ள நிலையில், சர்வதேச சமூகம் இந்தப் பதற்றத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
இந்திய அரசு இந்தியத் தொழிலாளரின் உயிரிழப்பு குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது. வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதன் அவசியம் இந்தச் சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.
இதையும் படிங்க: வேட்பாளர் பெருமக்களே..! SUVIDHA இணையதளம் மூலம் வேட்பு மனு... தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!!