நெல்லை மாநகரில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் செயல்பட்டு வரும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர், பாலியல் தொல்லை புகாரில் விரைவாக நடவடிக்கை எடுத்து ஒருவரை கைது செய்ய வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் உருவாக்கியுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, நெல்லை மாநகரில் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. பெண்கள் எந்த நேரத்திலும் தங்களது பாதுகாப்பு தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு இளம்பெண் ஒருவர் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரை அவசரமாக தொடர்புகொண்டு புகார் அளித்தார். அவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில், அதிரடிப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

விசாரணையில், தனது உறவினரின் சிகிச்சைக்காக நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்திருந்த அந்த இளம்பெண், மருத்துவமனையின் லிப்டில் சென்றபோது அங்கு பணியாற்றிய ஒருவர் தன்னிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை சிங்கப்பெண் படையினர் பிடித்து விசாரித்தனர். அவர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (49) என்பதும், அந்த மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
பின்னர் பாஸ்கரை பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அவர்மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்கள் பாதுகாப்பு தொடர்பான புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து வரும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் செயல்பாடு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: சிங்கப்பெண் அதிரடிப்படையின் ஆக்ஷன்!! இன்று முதல் ஆரம்பம்! களமிறங்கிய காவலர்கள்!