கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே உள்ள திம்மாபுரம் ஊராட்சி நேருபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (47). கூலித் தொழிலாளி. இவரது மனைவி கவிதா (44). இவர் மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு வைத்தீஸ்வரி, சாதிகா என்ற மகள்களும், சூர்யா என்ற மகனும் உள்ளனர். வைத்தீஸ்வரிக்கு திருமணம் ஆகி கணவர் வீட்டில் உள்ளார். சாதிகா கிருஷ்ணகிரியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் ரங்கசாமிக்கும், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்த மஞ்சுளா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இதை அறிந்த கவிதா தனது கணவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

கூலி வேலைக்கு சென்று வந்த ரங்கசாமி வாரம் ஒரு முறை வீட்டிற்கு வந்து சென்றார். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுககு முன்பு வேலைக்கு சென்ற ரங்கசாமி வீட்டிற்கு வராமல் இருந்தார். நேற்று முன் தினம் இரவு 7 மணி அளவில் கவிதா மார்க்கெட்டிற்கு சென்று வருவதாக தனது மகனிடம் கூறி விட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சூர்யாவும், அவரது தங்கை சாதிகாவும் சாப்பிட்டு விட்டு கதவை தாழ்பாள் போடாமல் படுத்து தூங்கினார்கள். இரவு 11 மணி அளவில் அவர்கள் வசித்து வந்த வீட்டின் மாடியில் இருந்து ரங்கசாமி அலறும் சத்தம் கேட்டது.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா தேர்தலில் மேட்ச் பிக்சிங்? முட்டி மோதிக் கொள்ளும் ராகுல்காந்தி Vs தேர்தல் ஆணையம்..
இதனால் பதறி போய் சூர்யா, அவரது தங்கை சாதிகா ஆகியோர் எழுந்து மாடிக்கு சென்றனர். அந்த நேரம் அவரது தாய் கவிதா பதற்றத்துடன் மேலே இருந்து கீழே இறங்கி ஓடினார். மேலும் மாடிக்கு சென்று பார்த்த போது ரங்கசாமி உடலில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சூர்யா தனது தங்கை உதவியுடன் தண்ணீரை ஊற்றியும், சாக்கு பையை அவரது மேல் போட்டும் தீயை அணைத்தனர். பிறகு அவர்கள் இருசக்கர வாகனத்தில் ரங்கசாமியை ஏற்றிக் கொண்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு டோல்கேட் வழியாக கொண்டு சென்றனர்.

அப்போது டோல்கேட்டில் இருந்த ஆம்புலன்சில் தந்தையை ஏற்றிக் கொண்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். உடல் முழுவதும் கருகி 80 சதவீதம் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக சூர்யா காவேரிப்பட்டிணம் போலீசில் புகார் செய்தார். அதில் தனது தந்தை ரங்கசாமிக்கு மஞ்சுளாவுடன் இருந்த கள்ளத் தொடர்பு காரணமாக தூங்கி கொண்டிருந்த தந்தையை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தனது தாயார் தீ வைத்து எரித்து கொலை செய்ததாக கூறியுள்ளார். அந்த புகாரின் பேரில் காவேரிப்பட்டிணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கவிதாவை தேடி வருகிறார். கள்ளத் தொடர்பை கைவிடாத கணவரை மனைவியே தீ வைத்து எரித்த சம்பவம் காவேரிப்பட்டிணம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கணவன் கொலையை கண்குளிர பார்த்த மனைவி.. கொலைகார பத்தினி சிக்கியது எப்படி? ஹனிமூனில் நடந்த ட்விஸ்ட்..