கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள தான்சானியா நாட்டின் கிளிமஞ்சாரோ மாகாணம் மோஷி நகரில் இருந்து தங்கொ நகருக்கு சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடும்பம் குடும்பமாக சென்றுள்ளனர்.

நெடுஞ்சாலையில் சபசபா என்ற பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரே மற்றொரு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென அந்த பேருந்தின் டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த சொகுசு பேருந்து மீது மோதி அப்பளம் போல நொறுங்கியது. பின்னர் சிறிது நேரத்திலேயே 2 பேருந்துகளும் தீப்பற்றி எரிந்தன.
இதையும் படிங்க: நைஜீரியாவில் கோர விபத்து: சுக்குநூறான பேருந்து.. 21 விளையாட்டு வீரர்கள் பரிதாப பலி..!
2 பேருந்துகளில் பலர் சிக்கிக்கொண்ட நிலையில், அவ்வழியே சென்றவர்கள் உடனடியாக பேருந்துகளில் இருந்தவர்களை காப்பாற்ற முயற்சித்தனர். மேலும், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

பின்னர் விபத்துக்குள்ளான இரண்டு பேருந்துகளில் இருந்து மொத்தம் 30 பேரை காயங்களுடன் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனிடையே இந்த தீ விபத்தில் 2 பேருந்துகளிலும் பயணம் செய்த 40 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த கோர விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஈரக்குலையே நடுங்குதே! அப்பளம் போல் நொறுங்கிய கார்.. 8 பேர் பலியான பெரும் சோகம்!