ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் மூன்றாவது வாரமாக தொடரும் நிலையில், ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் திறன் பெருமளவு அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஹெக்செத், “ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் 90 சதவீதமும், ட்ரோன் தாக்குதல் 95 சதவீதமும் குறைந்துவிட்டது. அவர்களின் பாலிஸ்டிக் ஏவுகணை உற்பத்தி மையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன. கடற்படை மற்றும் விமானப்படையும் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. ஈரான் இப்போது தற்காப்பு இல்லாத நிலையில் உள்ளது” என்று கூறினார்.
ஆனால் ராணுவ நிபுணர்கள் இந்தக் கூற்றுக்கு முழுமையாக உடன்படவில்லை. ஈரான் தனது முழு வலிமையையும் இன்னும் பயன்படுத்தவில்லை என்றும், நிலத்தடி சுரங்கங்கள் மற்றும் இரகசிய பதுக்கல் இடங்களில் பேரழிவு ஆயுதங்களை பெரிய அளவில் மறைத்து வைத்திருக்கலாம் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க: ஈரானுடன் போர் தொடர ரூ.1.84 லட்சம் கோடி வேணும்!! அமெரிக்க ராணுவம் டிமாண்ட்! வெள்ளை மாளிகை ஷாக்!

நிபுணர்களின் கூற்றுப்படி, ஈரான் தனது எஞ்சிய அனைத்து ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் பிற ஆயுதங்களையும் ஒரே நேரத்தில் ஏவினால், வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிலையங்கள் மீது பெரும் தாக்குதலை நடத்தி உலகப் பொருளாதாரத்தையே பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் வாய்ப்பு உள்ளது.
இந்த எச்சரிக்கைக்கு பதிலளித்த அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத், “எந்தவொரு ஆபத்தையும் நாங்கள் அலட்சியம் செய்யவில்லை. ஈரான் பதுக்கி வைத்துள்ள எந்த ஆயுதமும் ஏவப்படுவதற்கு முன்பே அதன் சொந்த ஏவுதளத்திலேயே அழிக்கப்படும் வகையில் மிகப் பெரிய தாக்குதல் திட்டத்தை அமெரிக்கா தயாரித்துள்ளது. எந்த வாய்ப்பையும் நழுவவிட மாட்டோம்” என்று உறுதியாகத் தெரிவித்தார்.
கடந்த 28ம் தேதி தொடங்கிய இந்தப் போர் இப்போது மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது. எரிசக்தி விலை உயர்வு, உலகப் பொருளாதாரப் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விளைவுகள் ஏற்கெனவே உணரப்படத் தொடங்கியுள்ளன. ஈரான் இறுதி தாக்குதலை நடத்தினால் என்ன நடக்கும் என்பது குறித்த அச்சம் உலக அளவில் அதிகரித்து வருகிறது.
இதையும் படிங்க: கேஸ் தட்டுப்பாடா? 47,000 டன் எல்.பி.ஜி உடன் குஜராத் வந்தது இந்திய கப்பல் நந்தா தேவி!